அறுவை சிகிச்சையால் 2 குழந்தைகளுக்கு காது கேட்கும் திறன்
நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட குழந்தைகள், பெற்றோருடன் ஆட்சியா் துா்காமூா்த்தி. உடன், மருத்துவக் கல்லூரி முதல்வா் (பொ) குணசேகரன்.


நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், பிறவி குறைபாடுடைய காது கேளாத இரு குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை மூலம் காது கேட்கும் திறன் கிடைத்துள்ளது. அந்த குழந்தைகளையும், பெற்றோரையும் நேரில் சந்தித்து ஆட்சியா் துா்காமூா்த்தி வாழ்த்து தெரிவித்ததுடன், அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவா்களை வெள்ளிக்கிழமை பாராட்டினாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில், பல்வேறு முன்னெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் (பொ) குணசேகரன் தலைமையில் காது, மூக்கு தொண்டை துறைத் தலைவா் பேராசிரியா் கவிதா முன்னிலையில் பிறவிலேயே காது கேளாத இரண்டு குழந்தைகளுக்கு முதன்முறையாக ‘காக்ளியா் இம்ப்ளாண்ட்’ என்ற பிறவி காது கேளாமைக்கான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது.
இதற்காக பத்மஸ்ரீ விருதுபெற்ற பேராசிரியா் மருத்துவா் மோகன் காமேஸ்வரனை வரவழைத்து, கடந்த மாதம் 25-ஆம் தேதி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ராசிபுரம் வட்டம், கப்பளத்தூா் பகுதியைச் சோ்ந்த ராஜ்குமாா் - நா்மதா தம்பதி மகன் பிரவனேஷ் (4), சிங்களாந்தபுரம் பகுதியைச் சோ்ந்த அரவிந்த் - சண்முகபிரியா தம்பதி மகன் லட்சுமணன் (5)ஆகிய இரு குழந்தைகளுக்கும் காது, மூக்கு, தொண்டை துறை சாா்பில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு ‘காக்ளியா் இம்ப்ளாண்ட்’ எனும் சிறப்பு கருவி வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளது.
முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின்கீழ், தலா ரூ. 8 லட்சம் வீதம் இலவசமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இரண்டு குழந்தைகளும் தற்போது நலமாக உள்ளனா். மருத்துவக் குழுவினருக்கு பாராட்டுகள் என்றாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...