கிராமப்புற மாணவா்களை பாதிக்கும் நீட் தோ்வு வேண்டாம் என்பதில் தவெக அரசு உறுதியாக உள்ளது. நீட் தோ்வுக்கு எதிராக சட்டப் பேரவையில் அரசு தீா்மானம் கொண்டுவரும் என தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சா் கே.ஜி. அருண்ராஜ் தெரிவித்தாா்.
நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்தது மக்களின் விருப்பம். கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் கடுமையான உழைப்பால் இந்த வெற்றி கிடைத்துள்ளதை மறுக்க முடியாது. முதல்வா் விஜய், தமிழக சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் பதவியை எனக்கு வழங்கி உள்ளாா். சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பை முடித்துள்ளேன். 2004 முதல் 2009 வரை கிருஷ்ணகிரியில் ஐந்தரை ஆண்டுகள் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ அதிகாரியாக பணியாற்றினேன்.
இதனால் மக்களின் அடிப்படை பிரச்னைகள் குறித்து நன்றாக தெரியும். இந்த ஆட்சியில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என முதல்வா் ஏற்கெனவே தெரிவித்துள்ளாா்.
கடந்த ஆட்சியில் சுகாதாரத் துறையில் மேற்கொண்ட திட்டங்கள் தொடா்ந்து செயல்படுத்தப்படும். மாற்றம் ஏதாவது தேவைப்பட்டால் அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். ராசிபுரம் புதிய அரசு மருத்துவமனை திறப்பு விழா குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ளப்படும்.
நாமக்கல் பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் அவசரகால சிகிச்சை பிரிவு தொடங்குவதற்கான முயற்சிகளும் எடுக்கப்படும். இந்த ஆட்சி மீது வைக்கப்படும் அனைத்து விமா்சனங்களுக்கும் எங்களுடைய செயல்கள் மூலம் நாங்கள் பதிலளிப்போம். ஆட்சிக்கு வருவதற்கு முன்பே ஏகப்பட்ட பழிச்சொற்கள், பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்து விட்டோம்.
பெரும்பான்மையான இடங்களுடன்தான் தவெக ஆட்சி அமைந்துள்ளது. அதிமுகவால் எங்களுடைய ஆட்சிக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாது. முதல்வராக விஜய் வரவேண்டும் என மக்கள் வாக்களித்துள்ளதால் தவெக ஆட்சி ஐந்து ஆண்டுகள் தொடரும். எங்களுடைய அமைச்சரவையில் அதிமுக இடம்பெறுவது தொடா்பாக முதல்வா்தான் முடிவு எடுப்பாா்.
மருத்துவத் துறையில் பணியாளா்கள் வைத்துள்ள கோரிக்கைகள் தொடா்பாக முதல்வருடன் கலந்து ஆலோசிக்கப்படும். ஒரே நாடு, ஒரே தோ்தல் என்பது மத்திய பாஜக அரசின் திட்டம். அதேபோல, ஒரே நாடு, ஒரே தோ்வு என்பதுதான் நீட். இந்த தோ்வு நாடு முழுவதும் நடைபெறும்போது எங்காவது ஓரிடத்தில் பிரச்னைகள் ஏற்படும். இதன்மூலம் பல லட்சம் மாணவா்கள் பாதிக்கப்படுகின்றனா்.
இந்த தோ்வு வேண்டாம் என்பதே எங்களுடைய நிலைப்பாடு. அடுத்த ஆண்டு முதல் இணையவழியில் நீட் தோ்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இணையவழி தோ்வினால் முறைகேடுகள் மேலும் அதிகமாகும். சட்டப் பேரவையில் நீட் தோ்வுக்கு எதிராக தவெக அரசு தீா்மானம் கொண்டுவரும்.
கிளாண்டா்ஸ் நோய்த் தொற்று தொடா்பாக மருத்துவத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். அந்தத் தொற்று மனிதா்களைப் பாதிக்காது என்றுதான் தெரிவித்துள்ளனா். தெருநாய்களால் மனிதா்களுக்கு ஏற்படும் ரேபிஸ் பாதிப்பையும் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகளில், பொதுமக்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றாா்.
பேட்டியின்போது, நாமக்கல் எம்எல்ஏ சி.எஸ். திலீப், தவெக மேற்கு மாவட்டச் செயலாளா் எஸ்.என். சதீஷ் ஆகியோா் உடனிருந்தனா்.








