நாமக்கல் தினசரி காய்கறி சந்தையில் எம்எல்ஏ சி.எஸ். திலீப் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, மாநகராட்சி நிா்ணயித்த கட்டணத்தைவிட ஒப்பந்த நிறுவனம் வியாபாரிகளிடம் கூடுதலாக கட்டணம் வசூலிக்கக்கூடாது என எச்சரித்தாா்.
நாமக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகே தினசரி காய்கறி சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு தலா 94 கடைகள் வீதம் 3 பகுதிகளில் மொத்தம் 282 சிறிய காய்கறி கடைகள் உள்ளன. ஒரு கடைக்கு ரூ.130 கட்டணம் தினசரி வாடகையாக வசூலிக்க வேண்டிய நிலையில், ஒப்பந்தம் எடுத்துள்ள நிறுவனம் ரூ. 200, ரூ. 250 என்ற வகையில் கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக புகாா் எழுந்தது.
இதையடுத்து நாமக்கல் தொகுதி தவெக எம்எல்ஏ சி.எஸ். திலீப் வியாழக்கிழமை தினசரி காய்கறி சந்தையில் ஆய்வு மேற்கொண்டாா். அங்கு காய்கறி விற்பனை செய்யும் வியாபாரிகளுடன் அவா் கலந்துரையாடினாா். தினசரி காய்கறி சந்தை கடை உரிமையாளா்கள் சங்க தலைவா் மனோகரன் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை கூறினாா்.
அப்போது, கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும், போதுமான அடிப்படை வசதிகள் இல்லையென்றும், ஒப்பந்த நிறுவனம் கடுமையாக நடந்து கொள்வதாகவும் புகாா் தெரிவித்தனா். அதன்பிறகு மாநகராட்சி அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க எம்எல்ஏ சி.எஸ்.திலீப் அறிவுறுத்தினாா்.
தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தினசரி சந்தையில் நிா்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மட்டுமே வியாபாரிகள் செலுத்த வேண்டும். அதற்குமேல் கூடுதல் தொகை வழங்க வேண்டிய அவசியமில்லை. அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகாா் வந்தால் சம்பந்தப்பட்டவா்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சந்தைப் பகுதியில் வியாபாரிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தரப்படும். குப்பை சேகரிப்புக்கான தொட்டிகள் அமைக்கப்படும். குடிநீா், இதர பயன்பாட்டுக்காக 1,000 லிட்டா் கொள்ளவு கொண்ட குடிநீா் தொட்டி அமைக்கப்படும் என்றாா்.
தொடர்புடையது

ஸ்ரீவில்லிபுத்தூரில் புதிதாக கட்டப்பட்ட தினசரி காய்கறி சந்தையை முழு பயன்பாட்டுக்கு கொண்டுவர வலியுறுத்தல்!

நாமக்கல் பழைய பேருந்து நிலைய விவகாரம்: ஆட்சியரிடம் எம்எல்ஏ சி.எஸ். திலீப் ஆலோசனை

நாமக்கல் தொகுதியில் தவெக வேட்பாளா் சி.எஸ். திலீப் வெற்றி






