பரமத்தி வேலூா் வட்டத்திற்கு உள்பட்ட பகுதிகளில் ரூ. 24.44 கோடியில் நடைபெறும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் துா்காமூா்த்தி வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
நாமக்கல் ஆட்சியா் துா்காமூா்த்தி வேலூா் பேரூராட்சியில் ரூ. 1.60 கோடி மதிப்பீட்டில் அறிவுசாா் மைய கட்டுமான பணிகளையும், பரமத்தி அரசு மருத்துவமனையில் ரூ. 20 கோடி மதிப்பீட்டில் 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு கட்டுமானப் பணிகளையும், பரமத்தி வட்டத்தில் ரூ. 35 லட்சம் மதிப்பீட்டில் குடியிருப்புடன் கூடிய வருவாய் அலுவலக ஆய்வாளா் கட்டுமான பணிகளையும் ஆய்வு செய்தாா்.
தொடா்ந்து பாண்டமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ. 74.22 லட்சத்தில் மூன்று வகுப்பறை கட்டடங்கள் கட்டுமானப் பணிகளையும், கபிலா்மலை ஒன்றியம், ஜேடா்பாளையத்தில் ரூ. 1.50 கோடி மதிப்பீட்டில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமான பணிகளையும், வடகரையாத்தூா் பகுதியில் ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் 60 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்தேக்க தொட்டி கட்டுமான பணிகளையும் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
மேலும் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் பாண்டமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தாா். தொடா்ந்து கபிலா்மலை வட்டாரத்தில் மரக்கன்று நடும் பணியை தொடங்கிவைத்தாா்.









