பயங்கரவாத அமைப்புகளுக்கு பணம் செல்வது தடுக்கப்பட்ட புள்ளிவிவரங்களை வெளியிட வேண்டும்: திருச்சி சிவா

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பயங்கரவாத அமைப்புகளுக்கு பணம் செல்வது தடுக்கப்பட்டது குறித்த புள்ளிவிவரங்களை மத்திய அரசு வெளியிட
Updated on
1 min read

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பயங்கரவாத அமைப்புகளுக்கு பணம் செல்வது தடுக்கப்பட்டது குறித்த புள்ளிவிவரங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்று மாநிலங்களவை திமுக உறுப்பினர் திருச்சி சிவா வலியுறுத்தினார்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையைக் கண்டித்து திமுக சார்பில் கருப்பு தின ஆர்ப்பாட்டம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் புதன்கிழமை நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா பங்கேற்றுப் பேசினார்.  பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏழை,  நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  வரும் நாள்களில் மத்திய அரசின் ரொக்கமில்லா பரிவர்த்தனை சாமானிய மக்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறியது:
பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பயங்கரவாத அமைப்புகளுக்கு பணம் செல்வது தடுக்கப்பட்டிருப்பது உண்மையானால்,  அதற்கான புள்ளிவிவரங்களை மத்திய அரசு வெளியிட வேண்டும்.  மேலும்,  பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பல கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருகிறது என்பது முரண்பட்ட தகவல் ஆகும்.  மத்திய,  மாநில அரசுகளோடு நெருங்கிய தொடர்பில் இருப்பவர்களிடம் பல கோடி பழைய ரூபாய் நோட்டுகள் புழக்கம் இருந்தது எப்படி?   
மேலும், மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் சுமார் 15 லட்சம் பேர் வேலையிழந்துள்ளனர்.  சிறு குறு தொழில்கள் முடங்கிவிட்டன.  நாட்டின் பொருளாதாரம் மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
தொழிலாளி உண்ணாவிரதம் இருக்கும்போது முதலாளி உண்ணும் விரதம் இருப்பது போல பண மதிப்பிழப்பு விவகாரத்தில் பாஜகவின் செயல்பாடு உள்ளது என்றார்.
மேடையில் திடீர் தகராறு:
மத்திய மாவட்ட திமுக சார்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க டி.எம். செல்வகணபதி தனது ஆதரவாளர்களுடன் வந்திருந்தார்.  அப்போது,  ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா வந்தபோது,  அவருடன் சேலம் மத்திய மாவட்ட திமுக செயலர் ராஜேந்திரன்,  டி.எம்.செல்வகணபதி ஆகியோர் மேடை ஏறினர். இதையடுத்து மாநில மாணவரணி துணைச் செயலாளர் தமிழரசன் மேடை ஏற முயன்றார்.
அப்போது, எம்எல்ஏ ஆர்.ராஜேந்திரனின் ஆதரவாளர்கள் தமிழரசனை தடுத்து நிறுத்தி கீழே இறக்கிவிட்டனர்.  இதையடுத்து இருதரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையறிந்த டி.எம்.செல்வகணபதி,  ராஜேந்திரனின் ஆதரவாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மேலும்,  ராஜேந்திரனும் அவர்களைச் சமாதானப்படுத்தினார்.  அதன்பிறகு தமிழரசனை மேடையில் ஏற அனுமதித்தனர்.  இரு தரப்பைச் சேர்ந்தவர்களின் வாக்குவாதத்தால் திமுக தொண்டர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com