பெரியார் பல்கலைக்கழக இயற்பியல் துறை சார்பில், தேசிய அறிவியல் தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
தேசிய அறிவியல் தின விழாவை தொடங்கி வைத்து, தலைமையுரையாற்றிய பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் பொ.குழந்தைவேல், இந்திய மண் உருவாக்கிய இயற்கையான அறிவியலாளர் சர்.சி.வி.ராமன். உலகத்தின் சிறந்த அறிவியல் அறிஞர்களான ஐன்ஸ்டீன், மேக்ஸ்வெல், நியூட்டன் ஆகியோர் இயற்பியலின் தத்துவ விதிகளிலேயே மாற்றங்களைக் கொண்டு வந்தவர்கள். அவர்களுடைய ஆய்வுப் பயன்பாடும், ஆய்வுக் கட்டுரைகளும் உலக அளவில் பேசப்பட்டவை.
ஆனால், 20-ம் நூற்றாண்டின் தலைசிறந்த கண்டுபிடிப்புகளில் ஒன்று, சர்.சி.வி.ராமன் கண்டுபிடித்த ராமன் விளைவாகும். அவர், அதற்கான நோபல் பரிசை சுவீடனில் பெற்றபோது, மேடையில் மிகவும் உணர்ச்சிவசப்பட்டவராக இருந்தார். காரணம், அவர் இந்தியாவில் இருந்து சென்றிருந்தாலும், அவருக்குப் பின்னால், நம்மை ஆண்ட ஆங்கிலேயரின் கொடி இருந்ததுதான்.
சர்.சி.வி.ராமனுக்கு, உலகின் தலைசிறந்த அறிஞர்களான ரூதர்போர்டு உள்ளிட்டோருடன், நெருங்கிய ஆராய்ச்சித் தொடர்பு இருந்தது. தனது தொடர்ஆய்வுகளில் பல்வேறு சாதனைகளைப் படைத்த சர்.சி.வி.ராமன், பள்ளி மாணவர்களுக்கான அறிவியலுக்கு மிக முக்கியத்துவம் தந்தார். இந்தியர்களின் மரபணுக்கள் இயல்பிலேயே பகுத்தாயும் திறன் கொண்டதாக திகழ்வதால், பல்வேறு துறைகளில் நோபல் பரிசு இந்தியாவுக்கு கிடைத்துள்ளது என்றார்.
இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய இந்திய அறிவியல் கழகப் பேராசிரியர் மனோஜ் நம்பூதிரி, பாடத்திட்டங்களில் வளர்ச்சி நிலைக்கு ஏற்ப மாற்றங்களைக் கொண்டு வந்தால் மட்டுமே வளமான ஆராய்ச்சி, ஒளிமயமான எதிர்காலத்துக்கு செல்ல இயலும் என்றார்.
நிகழ்ச்சியில், இயற்பியல் துறைத் தலைவர் பேராசிரியர் பி.குமாரதாஸ், உதவிப் பேராசிரியர் டி.பழனிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.