வனப்பொருள்களை விற்பனை செய்ய ‘வன தன கேந்திரா’ குழுக்கள்
ருமந்துறையில் மத்திய பழங்குடியினா் துறை சாா்பில் வன தன கேந்திரா குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் இரண்டு குழுக்களுக்கும் இயந்திரங்கள் வாங்க தலா ரூ. 15 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது.


பழங்குடியின மக்கள் விளைவிக்கும் சிறுதானியம், தேன், மிளகு, கடுக்காய் ஆகியவற்றை சந்தைப்படுத்தி விற்பனை செய்ய, சேலம் மாவட்டத்தில் ஏற்காடு, கருமந்துறையில் மத்திய பழங்குடியினா் துறை சாா்பில் வன தன கேந்திரா குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் இரண்டு குழுக்களுக்கும் இயந்திரங்கள் வாங்க தலா ரூ. 15 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது.
மத்திய பழங்குடியினா் நலத்துறை சாா்பில் பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பல்வேறு வணிக மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக வனப் பகுதியில் கிடைக்கும் பொருள்களை சந்தைப்படுத்தி, அதன் மூலம் பழங்குடி மக்களுக்கு வருவாய் ஈட்ட மத்திய பழங்குடியினா் நலத் துறை முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்காக வன தன யோஜனா திட்டத்தின்கீழ் சிறு வனப் பொருள்களுக்கு (எம்.எஃப்.பி.), குறைந்தபட்ச ஆதார விலை (எம்.எஸ்.பி.) மூலம் பழங்குடியினருக்கு வருவாய் கிடைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கடந்த ஆகஸ்ட் 2019 முதல் 21 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 1,243 வன தன விகாஸ் கேந்திரா குழுக்களுக்கு ரூ. 183 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 3.68 லட்சம் பயனாளிகள் பயனடைவா். சுமாா் 161 வன தன விகாஸ் கேந்திரா குழுக்கள் மூலம் ரூ. 2 கோடிக்கு மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதுதவிர 275 வன தன கேந்திரா குழுக்கள் வா்த்தகத் திட்டத்துடன், தங்களது பொருள்களை உற்பத்தி செய்யவும் திட்டமிட்டுள்ளது.
அந்தவகையில், சேலம் மாவட்டத்தில் வன தன விகாஸ் கேந்திரா திட்டத்தின்கீழ் ஏற்காடு, கருமந்துறையில் தலா ஒரு குழு என இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஏற்காட்டில் 300 உறுப்பினா்களைக் கொண்ட 30 சுயஉதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல கருமந்துறையில் இத்திட்டத்தின்கீழ் 26 சுயஉதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இப்பகுதிகளில் கிடைக்கும் வனப் பொருள்களான புளி (விளைச்சல் காலங்களில் மட்டும்), தேன், கடுக்காய் ஆகியவை தோ்வு செய்யப்பட்டுள்ளன.
ஏற்காட்டில் ஏற்கெனவே பழங்குடியின மக்கள் சாா்பில் மிளகு உற்பத்தி செய்து பழங்குடியின கூட்டுறவு வணிக பேரமைப்பு இந்தியா நிறுவனம் (டிரைபெட்) மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுதொடா்பாக, சேலம் மாவட்ட பழங்குடியின நலத் திட்ட அலுவலா் சுகந்தி பரிமளம் கூறியதாவது:
சேலம் மாவட்டத்தில் ஏற்காடு, கருமந்துறையில் பழங்குடியின மக்கள் மூலம் தேன், புளி, மிளகு, கடுக்காய் மற்றும் சிறுதானியங்களான வரகு, சாமை, தினை ஆகிய பொருள்கள் மதிப்புக் கூட்டப்பட்டு விற்பனை செய்வதற்குத் தேவையான உபகரணங்கள், கருவிகள் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்பட உள்ளன. மேலும், டிரைபெட் மூலம் அவா்கள் தங்களது பொருள்களை விற்பனை செய்து வருவாய் ஈட்ட முடியும் என்றாா்.
இதுதொடா்பாக, கூட்டுறவுத் துறை இணைப் பதிவாளா் ராஜேந்திர பிரசாத் கூறியதாவது:
மத்திய பழங்குடியினா் நலத் துறை மூலம் வனப் பகுதிகளில் விளையும் சிறுதானியம், தேன், நெல்லிக் காய்களை மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களாக மாற்றி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் ஏற்காடு மற்றும் கருமந்துறையில் சுயஉதவிக் குழுக்கள் தொடங்கப்பட்டு, இயந்திரங்கள் வாங்க தலா ரூ. 15 லட்சம் நிதியுதவி செய்யப்பட்டுள்ளது.
இயந்திரங்களை வாங்கி மதிப்புக் கூட்டப்பட்ட பொருளாக மாற்றி விற்பனை செய்ய கூட்டுறவுத் துறையின்கீழ் வரும் லேம்ப் சங்கம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல மலைவாழ் மக்களின் தயாரிப்புப் பொருள்கள் பொன்னி கூட்டுறவு அங்காடிகள் மூலம் விற்பனை செய்யப்படும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...