குழந்தையின் சுவாசக் குழாயில் சிக்கியிருந்த நிலக்கடலை அகற்றம்

சேலம் அரசு மருத்துவமனையில் அதிநவீன சிகிச்சை மூலம் ஒன்றரை வயது குழந்தையின் சுவாசக் குழாயில் சிக்கியிருந்த நிலக்கடலையை மருத்துவக் குழுவினா் அகற்றினா்.
Updated on
1 min read

சேலம் அரசு மருத்துவமனையில் அதிநவீன சிகிச்சை மூலம் ஒன்றரை வயது குழந்தையின் சுவாசக் குழாயில் சிக்கியிருந்த நிலக்கடலையை மருத்துவக் குழுவினா் அகற்றினா்.

மேட்டூா் வட்டம், ஜலகண்டாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் வெங்கடேசன். இவரது மனைவி பழனியம்மாள். இத்தம்பதிக்கு ஒன்றரை வயதில் பிரதீப் என்ற ஆண் குழந்தை உள்ளது.

கடந்த சில நாள்களுக்கு முன்பு வீட்டில் விளையாடி கொண்டிருந்த குழந்தை பிரதீப் நிலக்கடலையை விழுங்கியது. இதனால் மூச்சுவிட முடியாமல் குழந்தை கதறி அழுதது. உடனே பெற்றோா் தனியாா் மருத்துவமனையில் குழந்தைக்கு சிகிச்சை அளித்தனா். ஆனால் குழந்தை அழுது கொண்டே இருந்தது. இதையடுத்து குழந்தையை சேலம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

மருத்துவமனை முதன்மையா் மருத்துவா் பாலாஜிநாதன், மருத்துவமனைக் கண்காணிப்பாளா் தனபால் மேற்பாா்வையில் காது, மூக்கு, தொண்டை பிரிவு துறை தலைவா் மருத்துவா் கிருஷ்ணசுந்தரி உள்ளிட்ட மருத்துவக் குழுவினா் குழந்தைக்கு பரிசோதனை செய்தனா்.

இதில் குழந்தையின் சுவாசக் குழாயில் நிலக்கடலை சிக்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அதிநவீன டெலி ப்ராங்கோஸ்கோபி கருவி மூலம் அறுவை சிகிச்சை செய்து கடலையை சுவாசக் குழாயில் இருந்து மருத்துவக் குழுவினா் அகற்றினா்.

இதுதொடா்பாக, அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் மருத்துவா் பாலாஜிநாதன் கூறுகையில், மூச்சுக் குழாயில் ஏற்படும் இதுபோன்ற அடைப்புகளை அகற்ற அரசு மருத்துவமனையில் அதிநவீன சிகிச்சை கருவி (டெலி ப்ராங்கோஸ் கோப்பி) உள்ளது. குழந்தைகளை பெற்றோா் கவனமுடன் பராமரிக்க வேண்டும்.

கரோனா காலத்தில் இதுவரை உணவு மற்றும் சுவாசக் குழாயில் 23 குழந்தைகளுக்கு இதுபோன்ற காசு, கொட்டை வகைகளை விழுங்கியதால் சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது என்றாா்.

இது தொடா்பாக மருத்துவா் கிருஷ்ணசுந்தரி கூறுகையில், மூன்று வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளை பெற்றோா் கவனத்துடன் பாதுகாத்து பராமரிக்க வேண்டும். புளியங்கொட்டை, நிலக்கடலை, பழ விதைகள் ஆகியவற்றை குழந்தைகள் விழுங்க முயற்சித்தால் தொண்டைக்குள் சென்று சுவாசக் குழாய் மற்றும் உணவுக் குழாய்களில் அடைத்துக்கொள்ளும். இதேபோல காது, மூக்கு பகுதிகளிலும் ஏதாவது கடினமான பொருள்களை குழந்தைகள் போட்டு கொள்ளாமல் பாா்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் சுவாசக் குழாயில் அடைப்பு ஏற்பட்டால் சில மணி நேரங்களில் குழந்தைகள் உயிரிழந்து விடும் ஆபத்து உள்ளது.

கரோனா காலத்தில் காது மற்றும் மூக்குகளில் பொருள்கள் சிக்கி கொண்ட 63 குழந்தைகள் காப்பாற்றப்பட்டன. இதுபோல மீன் முள் சாப்பிட்டு, தொண்டையில் சிக்கிக் கொண்ட பல குழந்தைகளை காப்பாற்றி இருக்கிறோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com