எடப்பாடி: தற்போது கோடை வெயில் அதிகரித்து வரும் நிலையில் தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் பல்வேறு இடங்களில் தண்ணீர் பந்தல்கள் திறக்கப்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக திங்களன்று கொங்கணாபுரம் பேருந்து நிலைய பகுதியில், அதிமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் பந்தலை தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தார்.
தண்ணீர் பந்தலில் பொதுமக்களுக்கு இளநீர், தர்பூசணி, மோர் மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒன்றியக்குழு தலைவர் கரட்டூர் மணி தலைமையிலான அதிமுக நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர். இதேபோல் எடப்பாடி நகரப் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த தண்ணீர் பந்தலை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானம், மோர் உள்ளிட்டவற்றை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் நகர செயலாளர் ஏ.எம்.முருகன், முன்னாள் நகர்மன்ற தலைவர் டி.கதிரேசன், கூட்டுறவு சங்கத் தலைவர் கந்தசாமி உள்ளிட்ட திரளான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.