வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடியில் எலி மருந்து சாப்பிட்ட அரசு பள்ளி மாணவிகள் 4 பேர், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மாணவியர் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில், கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை ஆரம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த 3 மாணவிகள் மற்றும் இன்னாடு கிராமத்தைச் சேர்ந்த ஒரு மாணவியும் தங்கி, வாழப்பாடி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகின்றனர்.
கடந்த 19-ஆம் தேதி கோகுலாஷ்டமிக்கு பள்ளி விடுமுறை என்பதால், நான்கு மாணவிகளும் விடுதியில் இருந்து சொந்த ஊருக்கு செல்வதாகக் கூறிச் சென்றுள்ளனர். நான்கு மாணவிகளும் அவரவர் வீட்டிற்கு செல்லாமல், இவர்களோடு விடுதியில் தங்கி பயிலும் கொட்டைப்புத்தூர் கிராமத்திலுள்ள தோழியின் வீட்டிற்கு சென்று விட்டு, மறுநாள் தமது வீட்டிற்கு சென்றதாகக் கூறப்படுகிறது.
திங்கள்கிழமை வீட்டிலிருந்து விடுதிக்கு வந்த இந்த மாணவிகள் பள்ளிக்கு செல்லாமல், முருகன் கோவிலுக்கு சென்றதாகவும், இதனையறிந்த பெற்றோர்கள், மாணவிகளை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் மனம் உடைந்த மாணவிகள் நால்வரும், திங்கள்கிழமை இரவு விடுதியில் எலி மருந்து சாப்பிட்டுள்ளனர். செவ்வாய்க்கிழமை காலை வாந்தி எடுத்துள்ளனர். இதனைக்கண்ட விடுதி சமையலர் சத்தியம்மாள் மற்றும் மாணவிகள், நால்வரையும் அழைத்துச் சென்று வாழப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்.
மாணவிகளை பரிசோதித்த மருத்துவர்கள், நால்வரையும் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவலறிந்த வாழப்பாடி வட்டாட்சியர் கோபாலகிருஷ்ணன் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நலத்துறை தனி வட்டாட்சியர் மற்றும் வாழப்பாடி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாழப்பாடி அரசு பள்ளி விடுதியில் தங்கி படித்து வரும் நான்கு மாணவிகள் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.