தம்மம்பட்டி: தம்மம்பட்டி அருகே, இன்று காலை கோயிலில் பொங்கல் வைத்தபோது, தேனீக்கள் கொட்டியதில் 20 பேர் படுகாயம் அடைந்தனர்.
தம்மம்பட்டி அருகே செந்தாரப்பட்டி சிவன் கோயில் அருகே பெரியசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு, வாழப்பாடி, துக்கியம்பாளையத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர், சாமிக்கு பொங்கல் வைத்து வழிபாடு நடத்த, இன்று காலை, மூன்று வாகனங்களில் வந்தனர்.
இக்கோயில் வளாகத்தில் உள்ள மரத்தடியில், அடுப்பு வைத்து, பொங்கல் வைக்க ஆயத்தமாகினர். அப்போது, அடுப்பில் இருந்து எழுந்த புகையினால், மரத்தில் இருந்த தேனீக்கள் கூட்டம், அங்கிருந்தவர்களை விரட்டி கொட்டியது.
இதில், 20-க்கும் மேற்பட்டவர்களுக்கு முகம், கைகளில் படுகாயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்களுக்கு, செந்தாரப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில், வசந்தா (55) என்பவர், தீவிர சிகிச்சைப் பிரிவில் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.