சேலம்: தமிழகம் முழுவதும் ஷவர்மா என்ற அசைவ உணவு பாதுகாப்பாக தயாரிக்கப்படுகிறதா என்பது குறித்து அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்துகின்றனர்.
இதன் அடிப்படையில் சேலம் மாவட்டம் முழுவதும் உள்ள அசைவ உணவு கடைகளில் திடீர் சோதனை நடத்தி குறைபாடுகளை கண்டறிய உணவு பாதுகாப்பு துறை ஆணையரின் உத்தரவையடுத்து நேற்று மாவட்டம் முழுவதும் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
இதன் அடிப்படையில் சேலம் மாவட்டம் உணவு பாதுகாப்புத் துறை சார்பாக சேலம் மாவட்டத்திலுள்ள அயோத்தியாபட்டிணம், கொங்கணாபுரம், நங்கவள்ளி, ஓமலூர், பெத்தநாயக்கன்பாளையம், பனமரத்துப்பட்டி, சங்ககிரி, எடப்பாடி, சேலம் மாநகராட்சி நான்கு மண்டல பகுதிகளில் மொத்தம் 113 அசைவ உணவகங்களில் அப்பகுதிகளுக்கான உணவு பாதுகாப்பு அலுவலர்களால் ஆய்வு செய்யப்பட்டது.
ஆய்வில் 19 கடைகளில் கெட்டுப் போன சிக்கன், ஆட்டுக்கறி, மீன், நண்டு போன்றவை ரூ. 34,650 மதிப்பிலான 133.8 கிலோ கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.
மேலும் மாவட்ட நியமன அலுவலருக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தின் அடிப்படையில் 8 கடைகளுக்கு ரூ.13,000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் 22 கடைகளுக்கு உணவு பாதுகாப்புச் சட்டம் 2006 பிரிவு 26,27,56 ன்படி நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
இந்த கடைகள் அனைத்தும் தொடர் கண்காணிப்பில் செய்யப்பட்டுள்ளதோடு இந்த ஆய்வு தொடர்ந்து நடைபெறுமென உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சேலத்தில் நடைபெற்ற அதிரடி சோதனையில் 133 கிலோ கெட்டுப்போன கரி பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.