ஆத்தூர் அருகே கார் மீது பேருந்து மோதி விபத்து: 6 பேர் பலி

ஆத்தூர் அருகே சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி கார் மீது சொகுசு பேருந்து மோதிய விபத்தில் குழந்தை உள்பட 6 பேர் பலியாகினர்.
ஆத்தூர் அருகே கார் மீது பேருந்து மோதி விபத்து: 6 பேர் பலி

ஆத்தூர்: ஆத்தூர் அருகே சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி கார் மீது சொகுசு பேருந்து மோதிய விபத்தில் குழந்தை உள்பட 6 பேர் பலியாகினர். மேலும் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் லீ பஜார் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் கடந்த 30 தினங்களுக்கு முன்பு இறந்துள்ளார். இவரது 30 ஆம் நாள் துக்க நிகழ்ச்சி நேற்று (22.8.22) இரவு நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு ஆறுமுகத்தின் உறவினர்கள் எல்லோரும் கலந்து கொண்டுள்ளார்கள்.

இந்நிலையில் ஆறுமுகத்தின் துக்க நிகழ்ச்சிக்கு திருச்செங்கோட்டில் இருந்து வந்திருந்த ஆட்டோ டிரைவர் ராஜேஷ் என்பவர் தனது ஆம்னி காரில் துக்க நிகழ்வுகளில் கலந்து கொண்ட கோட்டை பகுதியைச் சேர்ந்த சரண்யா, சுகன்யா,  சந்தியா மற்றும் ராஜேஷின் தங்கை ரம்யா, தன்சிகா, உள்பட 11 பேர் ஆம்னி காரில் டீ குடிப்பதற்காக லீ பஜாரில் இருந்து ஆத்தூர் புறவழிச் சாலை வழியாக சென்றுள்ளார்கள்.

ஆத்தூர் அருகே உள்ள துலுக்கனூர் புறவழிச் சாலையில் ஆம்னி கார் சென்றபோது, சேலத்தில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த சொகுசு பேருந்து, கார் மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. 

விபத்தில் பலியானவர்கள்
விபத்தில் பலியானவர்கள்

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ராஜேஷ் , சரண்யா , சுகன்யா , ரம்யா , சந்தியா, தன்சிகா ஆகிய ஆறு பேர் பலியானார்கள், மேலும் படுகாயம் அடைந்த  5 பேர் ஆத்தூர்   அரசு மருத்துவமனையில் முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள். அப்போது சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு  செல்லும் வழியில் சிறுமி தன்சிகா (11) இறந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து தகவல் அறிந்த ஆத்தூர் தீயணைப்பு துறை மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, இறந்தவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள்.

 இந்த விபத்து குறித்து ஆத்தூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, தப்பி ஓடிய ஆம்னி பேருந்து ஓட்டுநரை தேடி வருகிறார்கள். துக்க நிகழ்விற்கு வந்த நிகழ்வில் ஐந்து பேர் இறந்து போன சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com