சேலம்: விபத்தில் இறந்த மகனின் உடல் உறுப்புகளை தானமளித்த தாய்
By DIN | Published On : 26th July 2022 10:14 AM | Last Updated : 26th July 2022 12:58 PM | அ+அ அ- |

சேலம்: சேலம் சாலை விபத்தில் இறந்த மகனின் உடல் உறுப்புகளை தாய் தானமளித்துள்ளார்.
சேலம் அல்லிக்குட்டை பகுதியை சேர்ந்த கமலநாதன், நவமணி தம்பதியர்களின் மகன் நிவாஸ்(25) மெக்கானிக்கல் இன்ஜினியரான இவர், ஐடி கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
இவர் கடந்த 15 ஆம் தேதி அம்மாபேட்டை மணல் மார்க்கெட் பகுதி அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த தனியார் பேருந்து அவர் மீது மோதியதில் படுகாயமடைந்த நிவாஸ், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
பரிசோதனை அடிப்படையில் இளைஞர் நிவாஸ் மூளைச்சாவடைந்ததாக மருத்துவர்கள் உறுதிசெய்து அவரது தாய் நவமணி மற்றும் அவரது சகோதரர் நரேஷ் ஆகியரிடம் தெரிவித்தனர். இதனால் தாய் மற்றும் சகோதரர் அதிர்ச்சி அதிர்ச்சியடைந்தனர். கரோனாவால் பாதிக்கப்பட்டு கணவர் கமலநாதன் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பாக தான் உயிரிழந்த நிலையில் மகன் விபத்தில் உயிரிழந்ததை தாங்க முடியாமல் கதறி அழுதார்.
இதையடுத்து நவமணி மற்றும் அவரது உறவினரிடம் அரசு மருத்துவமனை அதிகாரிகள் சந்தித்து அவரிடம் உடல் உறுப்புகளை தானம் செய்யுமாறு தெரிவித்தனர். எங்களுடைய மகன் இல்லை என்றாலும் சிலரின் வாழ்வில் மகிழ்ச்சியாக வாழ்வான் என்று தாய் கூறினார். இதற்கு தாய் மற்றும் உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, சேலம் அரசு மருத்துவமனையில் உடல் உறுப்புகள் எடுக்கப்பட்டது. இருதயம், இரண்டு வால்வுகள், சிறுநீரகம், தோல் ஆகியவற்றை எடுத்து பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் தாயிடம் மகனின் உடல் ஒப்படைக்கப்பட்டது. நிவாஸ் இறப்பை தாங்க முடியாமல், அவரது நண்பர்கள் உறவினர்கள் கதறி அழுதது பார்ப்பவர்கள் கண்களை கலங்க வைத்தது.
இதையும் படிக்க: எந்த அரசியல் கட்சியிலும் இணையப்போவதில்லை: யஷ்வந்த் சின்ஹ
இதைத் தொடர்ந்து அவரது தாயார் கூறுகையில், தனியார் பேருந்து கவனத்துடன் இயக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றபோது தனியார் பேருந்து வேகமாக வந்து விபத்தை ஏற்படுத்தி, என் மகனின் உயிரை பறித்துவிட்டது என்றும் கூறினார். என் மகன் இறந்துவிட்டாலும் அவனுடைய உடல் உறுப்புகள் மூலம் மற்றவர்கள் வாழ்க்கையில் வாழ்வான் என்று தாய் தெரிவித்தார்