சேலத்தில் 6 லட்சம் ரூபாயை 10 ரூபாய் நாணயங்களாகக் கொடுத்து கார் வாங்கிய இளைஞர்: காரணம்?

சேலத்தில் 6 லட்சம் ரூபாயை 10 ரூபாய் நாணயங்களாகக் கொடுத்து இளைஞர் ஒருவர் கார் வாங்கினார்.
சேலத்தில் 6 லட்சம் ரூபாயை 10 ரூபாய் நாணயங்களாகக் கொடுத்து கார் வாங்கிய இளைஞர்: காரணம்?

சேலம்: தருமபுரி மாவட்டம் அரூரை சேர்ந்த ரவி என்பவரின் மகன் வெற்றிவேல். இவர் மழலையர் பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். மேலும் நாட்டு வைத்தியம் செய்து வருவதாக கூறப்படுகிறது.  தற்போதைய சூழ்நிலையில் பத்து ரூபாய் நாணயங்கள் செல்லாது என பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், தங்கள் பகுதியில் ரூ.10  நாணயத்தை அந்த பகுதியை சேர்ந்த சிறுவர்கள் விளையாட்டு பொருளாக பயன்படுத்தி விளையாடி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் வெற்றிவேலின் மனதில் ஒரு தாக்கம் ஏற்பட்டது. அரசு வழங்கும் பத்து ரூபாய் நாணயத்தை செல்லாது என பரவலாக பேசப்பட்டு வருவதை அனைவரும் பயன்படுத்த வைக்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் ரூ.10 நாணயங்களை சிறிது சிறிதாக சேர்த்து தான் ஒரு சொகுசு காரை வாங்க வேண்டும் என்று திட்டமிட்டார்.

இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று கோயிலில் உள்ள வணிக வளாகங்கள், கடைகள், சாலையோர கடைகள் என பல பகுதிகளிலும் இந்த நாணயங்களை  சேகரித்துள்ளார். ரூ.10 நாணயங்களை சேகரித்து மூட்டையாக கட்டி கார் வாங்குவதற்காக இன்று சேலம் வந்தார்.

சேலம் ஜங்ஷன் பகுதியில் உள்ள பிரபல கார் நிறுவனத்திற்கு வந்த அவர், தான் சேர்த்து வைத்த ரூ.10 நாணயங்களை கொடுத்து கார் வாங்க விரும்புவதாக தெரிவித்தார். கார் நிறுவன அதிகாரிகள் வங்கி அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து பிறகு கார் வழங்க முன்வந்தனர்.

இதனையடுத்து சரக்கு வாகனத்தில் மூட்டையாக கொண்டுவந்த ரூ.10 நாணயங்களை தனது உறவினருடன் எடுத்துச் சென்று கார் நிறுவன வளாகத்தில் கொட்டி அதை பிரித்துக் காண்பித்து ஆறு லட்ச ரூபாயை பத்து ரூபாய் நாணயங்களாக வழங்கினார்

இதனையடுத்து தெரிவு செய்யப்பட்ட காருக்கான சாவியை கார் நிறுவன அதிகாரிகள் வெற்றிவேலுக்கு வழங்கினர். இன்றைய காலகட்டத்தில் பத்து ரூபாய் நாணயம் செல்லாது என பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், பொதுமக்களிடையே ரூ.10 நாணயம் குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அரசு சார்பில் அச்சடிக்கப்பட்ட இந்த காசு செல்லாது அல்ல என்பதை பொதுமக்கள் உணரும் வகையில் இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஈடுபடவே கார் வாங்கியதாகவும், இதற்காக பல மாதங்கள் போராடி ரூ.10 நாணயங்களை சேர்த்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறுக சிறுக சேமித்த பத்து ரூபாய் நாணயங்களை, பெருக கொடுத்து குடும்பத்துடன் வந்து கார் வாங்கி, இந்த காரில் தன் குடும்பத்தினரை அமரவைத்து வெற்றிவேல் ஊருக்கு புறப்பட்டார்.

இந்த சம்பவம் சிறிது சேர்த்தால் பெருக வாழலாம் என்ற பழமொழியை உணர்த்துவதோடு பொது மக்களுக்கும் பத்து ரூபாய் நாணயத்தின் அவசியம் குறித்து  இந்த செய்தி உணர்த்துகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com