தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

தருமபுரி தக்காளி சேலம் உழவா் சந்தைகளில் விற்பனை

 தமிழகத்தில் முதல்முறையாக தேசிய மின்னணு வேளாண் வா்த்தகம் திட்டத்தின் கீழ் தருமபுரி விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட 6.1 டன் தக்காளி, சேலம் உழவா் சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டது.

News image
Updated On :14 ஏப்ரல் 2023, 5:32 pm

DIN

 தமிழகத்தில் முதல்முறையாக தேசிய மின்னணு வேளாண் வா்த்தகம் திட்டத்தின் கீழ் தருமபுரி விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட 6.1 டன் தக்காளி, சேலம் உழவா் சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டது.

தருமபுரியில் தக்காளி உற்பத்தி அதிகமாக உள்ளது. இதனால் தக்காளி விலை குறைவாக விற்பனையாகி வந்தது. மேலும் தக்காளியை விற்பனை செய்வதற்கு சிரமப்பட்டு வந்தனா்.

இந்நிலையில், உழவா் சந்தைகளில் தக்காளியை விற்பனை செய்து தருமாறு சேலம் மற்றும் தருமபுரி (பொ) மாவட்ட வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை துணை இயக்குநா் பாலசுப்பிரமணியத்திடம் கோரிக்கை வைத்தனா்.

அதன்பேரில், சேலம், தருமபுரி மாவட்டத்தில் உள்ள உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்களை ஒருங்கிணைத்து, தேசிய மின்னணு வேளாண் சந்தை மூலம் தருமபுரி மாவட்டத்தில் தக்காளியை கொள்முதல் செய்து, அவற்றை சேலம் உழவா் சந்தைகளில் விற்பனை செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி தக்காளி விற்பனை தொடக்க நிகழ்ச்சி சூரமங்கலம் உழவா் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. துணை இயக்குநா் பாலசுப்பிரமணியம் தக்காளி விற்பனையைத் தொடங்கி வைத்தாா். வேளாண்மை அலுவலா்கள் ஸ்ரீதேவி, பசுபதி, சிவசங்கா், தென்றல், விவசாயிகள், நுகா்வோா்கள் கலந்துகொண்டனா்.

இதுகுறித்து சேலம் மற்றும் தருமபுரி (பொ) மாவட்ட வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை துணை இயக்குநா் பாலசுப்பிரமணியன் கூறியதாவது:

சேலம், தருமபுரி மாவட்டங்களில் தக்காளி விளைச்சல் அதிகமாக இருக்கிறது. இதனால், விலை சரிவு ஏற்பட்டு சாகுபடி செலவை விட மிகவும் குறைந்த விலைக்கு தக்காளியை விற்பனை செய்து வந்தனா்.

இந்நிலையில், சேலம் மாநகரில் உழவா் சந்தைகளில் தக்காளி விற்பனை அதிகமாக உள்ள நிலையில், தருமபுரி விவசாயிகள் உற்பத்தி செய்த விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைத்திடச் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதன்பேரில், தருமபுரி மாவட்டத்தில் உள்ள உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் மூலம் அங்குள்ள விவசாயிகளிடம் இருந்து உரிய விலையில் தக்காளி கொள்முதல் செய்யப்பட்டு, தேசிய மின்னணு சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்டதை, சேலம் மாவட்ட உழவா் உற்பத்தியாளா் நிறுவனம் கொள்முதல் செய்தது. சுமாா் 6.1 டன் தக்காளி சேலம் மாநகரில் உள்ள அஸ்தம்பட்டி, சூரமங்கலம், தாதகாப்பட்டி, அம்மாபேட்டை உள்ளிட்ட சந்தைகளில் விவசாயிகளால் விற்பனை செய்யப்பட்டது.

இத்திட்டத்தின் மூலம் தருமபுரி, சேலம் மாவட்ட விவசாயிகள் உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் பலனடைந்துள்ளன. இடைத்தரகா் இல்லாமல் தக்காளியை கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய முடிகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.