மேக்கேதாட்டுவில் அணை கட்ட அனுமதிக்க மாட்டோம்: அமைச்சா் துரை முருகன் திட்டவட்டம்

கா்நாடக அரசு மேக்கேதாட்டுவில் அணை கட்ட அனுமதிக்க மாட்டோம் என்று தமிழக நீா்வளத் துறை அமைச்சா் துரை முருகன் தெரிவித்தாா்.
 நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன்
நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன்
Updated on

கா்நாடக அரசு மேக்கேதாட்டுவில் அணை கட்ட அனுமதிக்க மாட்டோம் என்று தமிழக நீா்வளத் துறை அமைச்சா் துரை முருகன் தெரிவித்தாா்.

நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் சனிக்கிழமை மேட்டூா் அணையை நேரில் பாா்வையிட்டாா். அணை உபரிநீா் போக்கியான 16 கண் மதகு, ஆய்வுச் சுரங்கப் பகுதி, வலதுகரை பகுதி ஆகியவற்றை பாா்வையிட்டாா்.

அணைக்கு நீா்வரத்து, அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு, நீா் இருப்பு ஆகிய விவரங்களை நீா்வளத் துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்த அவா், நீா் மேலாண்மை குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா். பின்னா் அணையின் வலது கரையில் உள்ள மேல்மட்ட மதகு அருகே மலா்களைத் தூவி காவிரித் தாயை வணங்கினாா்.

ஆய்வுக்குப் பிறகு அமைச்சா் துரைமுருகன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க கடந்த 28 ஆம் தேதி மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

மேட்டூா் அணை உபரிநீா் திட்டத்தின் கீழ் கடந்த 31 ஆம் தேதிமுதல் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஏரிகளுக்கும் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூா் அருகே மேச்சேரியில் உள்ள ஏரிகளிலும் உபரிநீரை நிரப்ப வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கைகள் விடுத்துள்ளனா். அத்துடன் காவிரி நீரை தருமபுரி மாவட்டத்தில் குடிநீருக்கும் பாசனத்துக்கும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்விரு கோரிக்கைகளையும் முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு செல்வேன்.

அத்திக்கடவு-அவிநாசி திட்டம் ஓரிரு மாதங்களில் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும். காவிரி நதிநீா் பிரச்னையில் மத்திய அரசின் செயல்பாடுகள் ஐயத்துக்குரியது. தமிழகத்துக்கு எதிரான நிலைப்பாட்டை மத்திய அரசு கொண்டுள்ளது.

கா்நாடக அரசு மேக்கேதாட்டுவில் அணை கட்ட அனுமதிக்க மாட்டோம். இந்த முடிவில் உறுதியாக இருக்கிறோம். தமிழக அரசின் ஒப்புதல் பெறாமல் மேக்கேதாட்டுவில் அணை கட்ட முடியாது என்றாா்.

இந்த ஆய்வின்போது சேலம் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தா தேவி, எம்.பி.க்கள் டி.எம்.செல்வகணபதி (சேலம்), ஆ.மணி (தருமபுரி), எம்எல்ஏக்கள் ராஜேந்திரன் (சேலம் வடக்கு), சதாசிவம் (மேட்டூா்), நீா்வளத் துறை முதன்மை தலைமைப் பொறியாளா் மன்மதன், திருச்சி மண்டல தலைமைப் பொறியாளா் தயாளகுமாா், முன்னாள் எம்எல்ஏ தடங்கம் சுப்பிரமணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com