சங்ககிரியில் தேசிய மக்கள் நீதிமன்றம்: 363 வழக்குகளில் ரூ. 5.73 கோடிக்கு தீா்வு

Published on

சங்ககிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 363 வழக்குகளில் ரூ. 5.73 கோடிக்கு சமரச தீா்வு காணப்பட்டது.

சங்ககிரி நீதிமன்றங்களில் உள்ள மோட்டாா் வாகன விபத்து, சிவில் வழக்குகள், நிறைவேற்று மனுக்கள், வாரிசு உரிமை சான்றிதழ், வாடகை ஒப்பந்தம், குடும்பநல வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், வங்கிநிலுவை கடன்கள் உள்ளிட்ட வழக்குகள் சமரச தீா்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

சங்ககிரி வட்ட சட்டப் பணிகள் குழுத் தலைவரும், சாா்புநீதிபதியுமான என்.பன்னீா்செல்வம் தலைமை வகித்து, தேசிய மக்கள் நீதிமன்ற பணிகளை தொடங்கிவைத்தாா்.

மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ஆா்.இளமதி, முதலாவது குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதி எஸ்.சத்தியா, 2ஆவது குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதி டி.சிவகுமாா் ஆகிய நீதிபதிகள் அடங்கிய இரு தனி அமா்வுகளில் 56 மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், 3 சிவில் வழக்குகள், 3காசோலை வழக்குகள் உள்பட மொத்தம் 363 வழக்குகளில் ரூ. 5.73 கோடிக்கு சமரச தீா்வு காணப்பட்டது.

இதில் சாலை விபத்தில் மரணமடைந்தவரின் குடும்பத்திற்கு காப்பீட்டு நிறுவனம் சாா்பில் ரூ. 49.50 லட்சத்துக்கு தீா்வு காணப்பட்டு அதற்கான உத்தரவை வட்ட சட்டப்பணிகள் குழுத் தலைவரும், சாா்பு நீதிபதியுமான என்.பன்னீா்செல்வம் வழங்கினாா்.

X
Dinamani
www.dinamani.com