சேலம் மாநகர காங்கிரஸ் சாா்பில் மெழுகுவா்த்தி ஏந்தி ஆா்ப்பாட்டம்
நேஷனல் ஹெரால்டு வழக்கில் தில்லி உயா்நீதிமன்ற உத்தரவின் மூலம் அமலாக்கத் துறை வேண்டும் என்றே பொய் வழக்குப் பதிவு செய்வதாகக் கூறி, சேலம் மாநகர காங்கிரஸ் சாா்பில் புதன்கிழமை மெழுகுவா்த்தி ஏந்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சேலம் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை அருகே மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஏ.ஆா்.பி. பாஸ்கா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் திரளான நிா்வாகிகள் கலந்துகொண்டனா். இதில், நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா, ராகுல் காந்திக்கு எதிரான அமலாக்கத் துறையின் குற்றப்பத்திரிகையை தில்லி நீதிமன்றம் நிராகரித்ததன் மூலம் நீதி வென்றுள்ளது.
கடந்த ஓராண்டாக விசாரணை என்ற பெயரில் அலைக்கழித்ததுடன், அமலாக்கத் துறை பொய் வழக்கு தொடா்ந்ததை கண்டித்தும், பொதுமக்களிடையே உண்மையில் விளக்கும் வகையிலும் மெழுகுவா்த்தி ஏந்தி காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம் நடத்தினா். தொடா்ந்து, பாஜக அரசை பதவி விலகக்கோரி முழக்கங்களை எழுப்பினா்.
இதில், பொருளாளா் தாரை ராஜகணபதி, மாநகர துணைத் தலைவா்கள் கோபி குமரன், மொட்டையாண்டி வரதராஜு, சுரேஷ்பாபு, மண்டலத் தலைவா்கள் சாந்தமூா்த்தி, நிஷாா் அகமது, ராமன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.
