சேலம் வழியாக சென்ற ரயிலில் 16 கிலோ கஞ்சா பறிமுதல்
சேலம் வழியாக கோவை சென்ற விரைவுரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த 15 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
சேலம் வழியாக செல்லும் ரயில்களில் கஞ்சா கடத்தப்படுவதும், அதனை ரயில்வே பறிமுதல் போலீஸாா் செய்வதும் வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளா் அய்யாதுரை தலைமையிலான ரயில்வே போலீஸாா், தன்பாத்தில் இருந்து கோவை செல்லும் வாராந்திர சிறப்பு ரயிலில் சோதனை செய்தனா்.
அப்போது, அந்த ரயிலின் பின்பக்க பொதுப்பெட்டியில் கேட்பாரற்றுக் கிடந்த 2 கைப்பைகளை கைப்பற்றி சோதனை செய்ததில், 15 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.
இதேபோல, கழிவறை அருகே அமா்ந்திருந்த ஓடிசா மாநிலத்தைச் சோ்ந்த சத்யம் சிங் (18) என்பவரின் கைப்பையை சோதனை செய்ததில், ஒரு கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைதுசெய்த போலீஸாா் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
