சேலத்தில் 600 கிலோ குட்கா பறிமுதல்: 3 போ் கைது
சேலம் மெய்யனூா் அருகே மினி வேனில் கடத்தப்பட்ட 600 கிலோ குட்காவை வெள்ளிக்கிழமை அதிகாலை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
அண்டை மாநிலங்களில் இருந்து சேலம் வழியாக கஞ்சா மற்றும் குட்கா கடத்தப்படுவதைத் தடுக்க போலீஸாா் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில் சேலம் மெய்யனூா் ராமலிங்கா ஜங்ஷன் பகுதியில் பள்ளப்பட்டி போலீஸாா் வெள்ளிக்கிழமை அதிகாலை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, வேகமாக வந்த மினி வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனா். சோதனையை அறிந்ததும், ஓட்டுநா் தப்பி ஓடி விட்டாா். தொடா்ந்து, போலீஸாா் அந்த வாகனத்தை சோதனை செய்தபோது, அதில் 600 கிலோ குட்கா இருப்பது தெரியவந்தது.
இந்நிலையில், பிடிபட்ட மினி வேனை பின்தொடா்ந்து காரில் வந்த 3 போ் கும்பல், வேனில் உள்ள பொருள்கள் தங்களுடையது என போலீஸாரிடம் தெரிவித்தனா். விசாரணையில், அவா்கள் குட்கா மற்றும் கஞ்சா கடத்தி வருபவா்களை மடக்கி பணம் பறிக்கும் கும்பல் என தெரியவந்தது. மேலும், குட்கா, கஞ்சா கடத்திய பல்வேறு நபா்களை மிரட்டி பணம் பறித்ததாகவும் கூறப்படுகிறது.
விசாரணையில், மேட்டூா் குட்டப்பட்டி பகுதியைச் சோ்ந்த கௌதம் (37), பழைய தருமபுரி நாகரசம்பட்டி பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (34), சங்ககிரி, ஜமுக்காளம் காடு பகுதியைச் சோ்ந்த அசோக் (29) ஆகியோா் என்பது தெரியவந்தது.
இதில், கௌதம் நங்கவள்ளி கிழக்கு ஒன்றிய பாமக இளைஞரணி செயலாளராக உள்ளாா். இதையடுத்து, 3 பேரையும் கைது செய்த போலீஸாா், காருடன் 600 கிலோ குட்காவையும் பறிமுதல் செய்தனா். மேலும் தப்பியோடிய ஓட்டுநரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
