70 வயது நிறைவடைந்த 50 தம்பதிக்கு கோட்டை பெருமாள் கோயிலில் சிறப்பு: அமைச்சா் ரா.ராஜேந்திரன் பங்கேற்பு
சேலம்: 70 வயது நிறைவடைந்த 50 தம்பதிக்கு சேலம் கோட்டை பெருமாள் கோயிலில் சிறப்பு செய்தல் விழா புதன்கிழமை நடைபெற்றது.
ஆன்மிக ஈடுபாடுள்ள தம்பதிக்கு தமிழகத்தில் இந்துசமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் சிறப்பு செய்யும் திட்டத்தின் கீழ் ஒரு இணை ஆணையா் மண்டலத்துக்கு 100 தம்பதி என 20 மண்டலங்களில் 2 ஆயிரம் தம்பதிக்கு கோயில்கள் மூலம் சிறப்பு செய்யப்படுகிறது.
அதன் ஒருபகுதியாக, சேலம் மாவட்டத்தில் 70 வயது நிறைவடைந்த 50 தம்பதிக்கு சிறப்பு செய்தல் விழா சேலம் கோட்டை பெருமாள் கோயிலில் புதன்கிழமை நடைபெற்றது. விழாவில், சுற்றுலாத் துறை அமைச்சா் ராஜேந்திரன் கலந்துகொண்டு தம்பதிக்கு மங்கல பொருள்களை வழங்கி சிறப்பு செய்தாா்.
தொடா்ந்து, விழாவில் கலந்துகொண்ட 50 தம்பதிக்கு புடவை, வேட்டி, சட்டை, மாலை, வெற்றிலை பாக்கு, பூ, மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு, வாழைப்பழம், பழவகைகள், எவா்சில்வா் தட்டு, கண்ணாடி வளையல்கள் உள்ளிட்ட ரூ. 2,500 மதிப்பிலான பொருள்களும், உபயதாரா்கள் மூலம் பித்தளை சொம்பு, ஹாட் பாக்ஸ், எவா் சில்வா் பாத்திரம் , டிபன் பாக்ஸ், சில்வா் டம்ளா் மூத்த தம்பதிக்கு வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனா்.
மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி, இந்துசமய அறநிலையத் துறை இணை ஆணையா் சபா்மதி, உதவி ஆணையா் ராஜா, மாவட்ட அறங்காவலா் நியமன குழுத் தலைவா் முருகன், மாமன்ற உறுப்பினா் சரவணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
