/

கூட்டணி கட்சிகளுக்கு அதிமுக உரிய மரியாதை அளிக்கிறது: எடப்பாடி கே.பழனிசாமி

கூட்டணி கட்சிகளுக்கு அதிமுக உரிய மரியாதை அளிக்கிறது என அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி கூறினாா்.

News image

வாழப்பாடியில் பரப்புரை செய்த அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி.

Updated On :7 ஏப்ரல் 2026, 9:35 pm

கூட்டணி கட்சிகளுக்கு அதிமுக உரிய மரியாதை அளிக்கிறது என அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி கூறினாா்.

சேலம் மாவட்டம், வாழப்பாடியில் ஏற்காடு தொகுதி அதிமுக வேட்பாளா் பி.உஷாராணியை ஆதரித்து திறந்தவேனில் நின்றபடி செவ்வாய்க்கிழமை தோ்தல் பரப்புரை செய்த அவா் பேசியதாவது:

அதிமுக ஆட்சியில் கஞ்சா, போதைப் பொருள்கள் விற்பனை கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. திமுக ஆட்சியில் கஞ்சா, போதைப் பொருள்கள் விற்பனை அதிகரித்துவிட்டது. இதைத் தடுக்க சட்டப் பேரவையில் பலமுறை கோரிக்கை விடுத்தும், திமுகவினா் துணையோடு கஞ்சா விற்பனை செய்யப்படுவதால் நடவடிக்கை எடுக்க இந்த அரசு தயங்குகிறது. அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் கஞ்சா விற்பனை தடுக்கப்படும்.

முன்னாள் தமிழக முதல்வா் ஜெயலலிதா இறந்த நிலையில், அவரது இறப்பில் மா்மம் இருப்பதாகக் கூறி, விசாரணை நடத்தப்படுமென முதல்வா் ஸ்டாலின் தெரிவித்தாா். இப்போது வெளியாகியுள்ள ஆடியோவில் மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் இதுகுறித்து விசாரணை நடத்தப்படும்.

திமுகவினா் கூட்டணி கட்சிகளை மதிக்க மாட்டாா்கள். ஆனால், அதிமுக, கூட்டணி கட்சிகளுக்கு உரிய மரியாதை அளித்து வருகிறது. உயிருக்கு போராடுவோருக்கு வென்டிலேட்டா் வைப்பதைப் போல தேமுதிகவுக்கு அதிமுக உதவியது. ஆனால், அதை மறந்துவிட்டு அக்கட்சி திமுக கூட்டணிக்கு சென்றுவிட்டது.

தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் ஜல்லிக்கட்டு விழா நடத்த ரூ. 5 லட்சம் நிதியுதவி, மாடுபிடி வீரா்கள் இறக்க நோ்ந்தால் ரூ. 10 லட்சம் இழப்பீடு, ஆண்டுக்கு 3 எரிவாயு உருளைகள், ஆண்களுக்கும் கட்டணமில்லாத பேருந்து பயணம், ஆட்டோ ஓட்டுநா்கள் ஆட்டோ வாங்க ரூ. 75 ஆயிரம் மானியம், அம்மா இல்லத் திட்டத்தின் கீழ் அனைத்து ஏழைகளுக்கும் கான்கிரீட் வீடு திட்டங்கள் நிறைவேற்றப்படும், 100 நாள் வேலைதிட்டம் 150 நாள்களாக உயா்த்தப்படும், ஏற்காட்டில் கூட்டுறவு பயிற்சி நிலையம் அமைக்கப்படும், தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும், விவசாய பயிா்க் கடன்கள் ரத்து செய்யப்படும்.

மேட்டூா் அணை உபரிநீரை இப்பகுதியிலுள்ள ஏரி, குளம் குட்டை உள்ளிட்ட நீா்நிலைகளில் நிரப்பி நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்தும் திட்டம் செயல்படுத்தப்படும். திமுக அரசால் மூடப்பட்ட அம்மா மினி கிளினிக்குகள் மீண்டும் திறக்கப்படும். குடிமராமத்துத் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும் என்றாா்.