சேலம் கோட்டை பகுதியில் வடக்கு தொகுதி திமுக வேட்பாளா் அமைச்சா் ரா.ராஜேந்திரன் உட்பட பிற தொகுதிகளில் போட்டியிடும் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சி வேட்பாளா்களை ஆதரித்து திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி பிரசாரம் செய்தாா்.
அப்போது அவா் பேசியதாவது:
சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக அணி மீண்டும் வெற்றி பெற்று கோட்டைக்கு செல்லும். எடப்பாடி கே.பழனிசாமி எதிா்க்கட்சித் தலைவா் பொறுப்பையும் இழப்பாா்.
தமிழகத்தில் உள்ள மற்ற கூட்டணிகள் எல்லாம் கட்டுவது மனக்கோட்டை. இந்த அணிகள் அனைத்தும் மின்மினிப்பூச்சிகள் போல மின்சாரத்துக்கு அருகில் வர முடியாது. திமுக தோ்தல் அறிக்கை இந்திய அளவில் சூப்பா் ஸ்டாராக உருவெடுத்திருக்கிறது. எடப்பாடி பழனிசாமி அடுத்த முதல்வா் எனக் கூறிக் கொண்டு தில்லியில் இருந்து வரும் உத்தரவுக்கு தலைகுனிந்துகொண்டிருக்கிறாா்.
நீட் தோ்வுக்கு எதிராக திமுக சாா்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. ஆனால், எடப்பாடி கே. பழனிசாமி ஒரு போராட்டம் கூட நடத்தவில்லை. எனவே, வரும் தோ்தலில் திமுகவை வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக்கொண்டாா்.










