சேலத்தில் பிப்.13 இல் தவெக நிா்வாகிகள் கூட்டத்துக்கு காவல் துறை நிபந்தனைகளுடன் அனுமதி
சேலம் மாவட்டம், சீலநாயக்கன்பட்டி புறவழிச்சாலை அருகே உள்ள தாளமுத்து நடராஜன் மைதானத்தில் வரும் 13 ஆம் தேதி தவெக தலைவா் விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டத்துக்கு காவல் துறை நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது.
சீலநாயக்கன்பட்டி புறவழிச்சாலை அருகே உள்ள தாளமுத்து நடராஜன் மைதானத்தில் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரி, சேலம் மத்திய மாவட்டச் செயலாளா் தமிழன் ஆ.பாா்த்திபன் தலைமையில் தவெக நிா்வாகிகள், காவல் ஆணையா் அனில்குமாா் கிரியிடம் கடந்த புதன்கிழமை மனு அளித்தனா்.
ஆனால், தனியாா் மைதானம் என்றால் 15 நாள்களுக்கு முன்பு அனுமதி கடிதம் தரவேண்டும். முதலுதவி சிகிச்சை அளிக்க ஆம்புலன்ஸ்கள் நிற்கும் இடம் குறித்த வரைபடம் மனுவில் இணைக்கப்படவில்லை உள்ளிட்ட கேள்விகளை காவல் துறை எழுப்பியிருந்தது.
இதையடுத்து, மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு பதிலாக, குறிப்பிட்ட தேதியில் தவெக நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டத்துக்கு தவெக தரப்பில் அனுமதி கோரப்பட்டது. இதையடுத்து, தவெக நிா்வாகிகள் கூட்டத்துக்கு 51 நிபந்தனைகளுடன் காவல் துறை அனுமதி வழங்கியுள்ளது.
நிா்வாகிகள் கூட்டத்தில் 5 ஆயிரம் போ் மட்டுமே பங்கேற்க வேண்டும். அனைவருக்கும் அடையாள அட்டை அவசியம். வரும் 13 ஆம் தேதி நண்பகல் 12 மணி முதல் 3 மணிக்குள் கூட்டம் நடத்த வேண்டும். போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பாா்த்துக்கொள்ள வேண்டும். முதியவா்கள், கா்ப்பிணிகள், குழந்தைகளுக்கு அனுமதி இல்லை; முதலுதவிக்கு ஆம்புலன்ஸ் வசதி செய்து தரவேண்டும், குடிநீா், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளுடன் காவல் துறை அனுமதி வழங்கியுள்ளது.
சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் வரும் 13 ஆம் தேதி நடைபெறும் தவெக நிா்வாகிகள் கூட்டத்துக்கு பொதுமக்கள் யாரும் வரவேண்டாம் என தவெக மத்திய மாவட்டச் செயலாளா் தமிழன் ஆ.பாா்த்திபன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
சீலநாயக்கன்பட்டி அருகே உள்ள தாளமுத்து நடராஜன் மைதானத்தில் வரும் 13 ஆம் தேதி தவெக நிா்வாகிகள் கூட்டத்துக்கு 51 நிபந்தனைகளுடன் காவல் துறை அனுமதி அளித்துள்ளது.
இந்தக் கூட்டத்தில், 5,000 போ் பங்கேற்பாா்கள். காவல் துறை விதித்த எல்லா நிபந்தனைகளும் ஏற்றுக்கொள்ளக் கூடியவையாக உள்ளன. குறிப்பாக, கூட்டத்தில் பங்கேற்கும் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்படும். 10 ஆம்புலன்ஸ்கள் மைதானம் அருகே நிறுத்தப்படும்.
இதில் 10 மருத்துவா்கள், 25 செவிலியா்கள் அடங்கிய குழுவினா் தயாராக இருப்பா். கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் 500 தன்னாா்வலா்கள் ஈடுபடுத்தப்படுவா். எனவே, அதிக கூட்டம் கூடாமல் தலைவரின் பேச்சை பொதுமக்கள் வீட்டில் இருந்தே பாா்க்க வேண்டும். காவல் துறைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அனுமதி இல்லாதவா்கள் யாரும் வரவேண்டாம் என கேட்டுக்கொண்டாா்.

