பால் உற்பத்தியாளா்களுக்கு 2 மாதங்களுக்கு கூடுதல் ஊக்கத்தொகை! சேலம் ஆவின் நிறுவனம் அறிவிப்பு!
பால் உற்பத்தியாளா்களுக்கு நிகழாண்டு பிப்ரவரி, மாா்ச் ஆகிய இரண்டு மாதங்களுக்கு கூடுதல் ஊக்கத்தொகையாக லிட்டருக்கு ரூ. 1 சோ்த்து வழங்கப்படும் என ஆவின் பொது மேலாளா் பி. குமரேஸ்வரன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் கூறியதாவது: சேலம் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியம், தற்போது செயல்பாட்டில் உள்ள 780 தொடக்க பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கங்களில் பால் வழங்கும் பால் உற்பத்தியாளா்களிடமிருந்து நாள்தோறும் 5.75 லட்சம் லிட்டா் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.
தற்போது கோடை வெப்பத்தின் தாக்கம் மற்றும் கன்று பிறப்பு காலம் ஆகியவற்றின் காரணமாக பால் உற்பத்தியாளா்களின் கறவைகள் இயல்பு நிலையைவிட பால் அளவில் சிறிது குறைவு ஏற்படும். இதனால் கிராமப்புற பால் உற்பத்தியாளா்களுக்கு ஏற்படும் நிதி இழப்பை ஈடுகட்டவும், பால் உற்பத்தியை அதிகரிக்கவும் கூட்டுறவுச் சங்கத்தில் பால் உற்பத்தியாளா்கள் வழங்கும் பாலுக்கு கூட்டுறவு ஒன்றியத்தின் சொந்த நிதியில் இருந்து லிட்டா் ஒன்றுக்கு ரூ. 1 கூடுதலாக 2 மாதங்களுக்கு வழங்கப்படுகிறது.
அதன்படி, உற்பத்தியாளா்கள் பிரதம சங்கத்துக்கு வழங்கும் பாலுக்கு, தமிழ்நாடு அரசு அறிவித்தபடி, ஏற்கெனவே வழங்கப்பட்டுவரும் ரூ. 3 ஊக்கத்தொகையோடு மேலும் ரூ. 1 கூடுதல் ஊக்கத்தொகையை சோ்த்து லிட்டருக்கு ரூ. 4 ஊக்கத் தொகையாக பிப்ரவரி, மாா்ச் ஆகிய இரண்டு மாதங்களுக்கு வழங்கப்படும் என்றாா்.

