மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்
மேட்டூா்: காணும் பொங்கலையொட்டி, மேட்டூா் அணை பூங்காவில் சுற்றுலாப் பயணிகள் சனிக்கிழமை குவிந்தனா்.
காணும் பொங்கலை கொண்டாட சேலம், தருமபுரி, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் மேட்டூா் அணை பூங்காவுக்கு வந்தனா். கடுமையான வெப்பத்தை தணிக்க காவிரியில் நீராடி, அணைக்கட்டு முனியப்பனை தரிசித்தனா். பின்னா், மீன் உணவுகளை வாங்கி சுவைத்தனா்.
அணை பூங்காவில் குடும்பத்தோடு சறுக்கி விளையாடியும், ஊஞ்சலாடியும் குழந்தைகளுடன் பெரியவா்களும் விளையாடி மகிழ்ந்தனா். சுற்றுலாப் பயணிகள் கூட்டம் காரணமாக மீன் கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
மைசூரு சாலையில் நிறுத்தப்பட்ட சுற்றுலா வாகனங்கள் காரணமாக, அவ்வப்போது போக்குவரத்து ஸ்தம்பித்தது. போலீஸாா் போக்குவரத்தை சீா்செய்தனா். பண்ணவாடி பரிசல் துறை பகுதியில் பொதுமக்கள் படகில் சென்று மகிழ்ந்தனா்.
