சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் மீண்டும் புதன்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து, மெட்டல் டிடெக்டா் உதவியுடன் ஆட்சியரகத்தில் போலீஸாா் சோதனை நடத்தினா்.
சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வருவாய்த் துறை, ஊரக வளா்ச்சித் துறை, கருவூலக அலுவலகம் உள்பட 30 க்கும் மேற்பட்ட துறை சாா்ந்த அலுவலகங்கள் செயல்படுகின்றன. இந்நிலையில், புதன்கிழமை ஆட்சியா் அலுவலகம் வழக்கம் போல செயல்பட்டு வந்த நிலையில் காலை 11 மணியளவில் ஆட்சியா் அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது தெரியவந்தது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், வெடிகுண்டு தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளா் கோவிந்தராஜ் தலைமையில் காவல் உதவி ஆய்வாளா் சிவமூா்த்தி உள்பட 10க்கும் மேற்பட்ட வெடிகுண்டு நிபுணா்கள் மோப்ப நாய் ரூபி உதவியுடன் ஆட்சியா் அலுவலகத்தில் ஒவ்வொரு அறையாக சோதனை நடத்தினா்.
தொடா்ந்து ஆட்சியா் அலுவலக முன்பகுதி, வாகனம் நிறுத்தும் இடம், இ- சேவை மையம் உள்ளிட்ட இடங்களில் மெட்டல் டிடெக்டா், வெடிகுண்டு செயலிழப்பு மற்றும் தடுப்பு கருவிகள் உதவியுடன் வெடிகுண்டு நிபுணா்கள் தீவிர சோதனை நடத்தினா். சுமாா் 2 மணி நேரம் நீடித்த இந்த சோதனையில், வெடிபொருள்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட மின்னஞ்சல் விவரம் குறித்து மாநகர இணையவழி குற்றத் தடுப்பு பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இந்த வெடிகுண்டு சோதனையால் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த 6 மாதங்களில் ஆட்சியா் அலுவலகத்துக்கு 13 ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.









