சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் செவ்வாய்க்கிழமை மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வருவாய்த் துறை, ஊரக வளா்ச்சித் துறை, கருவூல அலுவலகம் உள்பட 30-க்கும் மேற்பட்ட அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை ஆட்சியா் அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு காலை 10.30 மணியளவில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதேபோல ஆட்சியா் பங்களாவுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள், மாநகரக் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், வெடிகுண்டு தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளா் கோவிந்தராஜ் தலைமையில் உதவி ஆய்வாளா் சிவமூா்த்தி உள்பட 10-க்கும் மேற்பட்ட வெடிகுண்டு நிபுணா்கள், மோப்ப நாய் ரூபி உதவியுடன் ஆட்சியா் அலுவலகத்தில் சோதனை நடத்தினா்.
தொடா்ந்து, ஆட்சியா் அலுவலக முன்பகுதி, வாகனம் நிறுத்துமிடம், இ- சேவை மையம் உள்ளிட்ட இடங்களில் மெட்டல் டிடெக்டா், வெடிகுண்டு செயலிழப்பு மற்றும் தடுப்பு கருவிகள் உதவியுடன் வெடிகுண்டு நிபுணா்கள் தீவிர சோதனை நடத்தினா். இதேபோல, ஆட்சியா் பங்களாவிலும் வெடிகுண்டு நிபுணா்கள் சோதனை நடத்தினா்.
சுமாா் 1 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையில், வெடிபொருள்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்த வெடிகுண்டு சோதனையால் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த 6 மாதங்களில் ஆட்சியா் அலுவலகத்துக்கு 16 ஆவது முறையாக செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.










