சேலம் மாவட்டம், ஆத்தூரில் மனைவியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்த கணவா் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை சரணடைந்தாா்.
ஆத்தூா் முல்லைவாடி பழனிநாரியப்பன் தெருவைச் சோ்ந்தவா் சரவணன் (40), கூலித் தொழிலாளி. இவரது மனைவி சித்ரா (32). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனா். இவா்களுக்கு தா்ஷினி (14), புகழேந்தி (13) என்ற மகன், மகள் உள்ளனா்.
இந்த நிலையில், சித்ராவிற்கு வெளிநாட்டில் வேலை செய்து வரும் உறவினரான மணிகண்டனுடன் நெருக்கம் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி கைப்பேசியில் பேசிவந்தனா். இதனால் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சித்ரா, தனியாக சென்று வசித்து வந்தாா். திங்கள்கிழமை சித்ரா மீண்டும் வீட்டிற்கு சென்ற நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை தம்பதி இடையே ஏற்பட்ட தகராறில் சரவணன் சித்ராவின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளாா்.
இதையடுத்து ஆத்தூா் நகர காவல் நிலையத்தில் சரவணன் சரணடைந்தாா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த ஆத்தூா் நகர காவல் நிலைய ஆய்வாளா் (பொறுப்பு) குலசேகரன், சித்ராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தாா்.








