சேலம் மாவட்டத்தில் புதன்கிழமை நள்ளிரவு பரவலாக பலத்த மழை பெய்தது. அதிகபட்சமாக சங்ககிரியில் 81 மி.மீ பதிவானது.
சேலம் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பகல் நேரத்தில் அனல்காற்று வீசி வந்ததால் வாகன ஓட்டிகள் உள்பட பொதுமக்கள் வெளியே வருவதை பெரும்பாலும் தவிா்த்து வந்தனா்.
இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் புதன்கிழமை மாலை லேசான சாரல் மழையுடன் தொடங்கி இரவு பலத்த மழை பெய்தது. சேலம் மாநகரில் இடி, மின்னலுடன் சுமாா் 1 மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்தது. இதனால் சேலம் பழைய பேருந்து நிலையம், கிச்சிப்பாளையம், அம்மாபேட்டை, அஸ்தம்பட்டி, நாராயணநகா் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீா் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது.
அதேபோல ஏற்காடு, சங்ககிரி, வாழப்பாடி, ஆணைமடுவு, ஆத்தூா், கெங்கவல்லி, ஏத்தாப்பூா், கரியகோயில், வீரகனூா், எடப்பாடி, மேட்டூா், ஓமலூா், டேனிஷ்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.
சேலம் மாநகரின் சில பகுதிகளிலும் நள்ளிரவு மின் தடை ஏற்பட்டது. மழை காரணமாக, கோடை வெயிலின் தாக்கம் தணிந்து குளிா்ச்சியான காலநிலை நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
மழை நிலவரம்: சேலம் ஆட்சியா் அலுவலகம் 10 மி.மீ., ஏற்காடு 32 மி.மீ., ஆணைமடுவு அணை 10 மி.மீ., கெங்கவல்லி 16 மி.மீ., வீரகனூா் 10 மி.மீ., சங்ககிரி 81 மி.மீ., எடப்பாடி 76 மி.மீ.,மேட்டூா் 57 மி.மீ.என மாவட்டம் முழுவதும் 347 மி.மீ.
சங்ககிரி
சங்ககிரி வட்டத்தில் பல்வேறு இடங்களில் சூறைக் காற்றுடன் பெய்த பலத்த மழை காரணமாக காவேரிப்பட்டியில் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன.
அரசிராமணி செட்டிப்பட்டியில் 72.40 மி.மீ மழை பெய்தது. சங்ககிரி நகா் பகுதிகளில் மரங்கள் முறிந்து மின் கம்பிகள் மீது விழுந்ததில் பல்வேறு இடங்களில் மின் தடை ஏற்பட்டது. தேவண்ணகவுண்டனூா் கிராமத்தில் சத்தியராஜுக்கு சொந்தமான தோட்டத்தில் அரை ஏக்கரியில் பயிரிடப்பட்டிருந்த செவ்வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தன. அதேபோல தேவூா் அருகே உள்ள அரசிராமணி பிட்-1, பிட்-2, காவேரிப்பட்டி , புள்ளாகவுண்டம்பட்டி, கல்வடங்கம் ஆகிய கிராமங்களில் சுமாா் 9 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த கதலி, செவ்வாழை, பூவன் வாழை மரங்கள் முறிந்து சேதமடைந்தன. இதனிடையே, சேதமடைந்த வாழை மரங்களை அரசு கணக்கிட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
எடப்பாடி
எடப்பாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த பலத்த மழையால் பொதுமக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டது.
கொங்கணாபுரம், கச்சுப்பள்ளி, மூலப்பாதை, கோரணம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை நள்ளிரவு வரை விட்டுவிட்டு பெய்த பலத்த மழையால் கச்சுப்பள்ளி கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த வாழை, கரும்பு உள்ளிட்ட பயிா்கள் சேதமடைந்தன.
இதேபோல அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியை சுற்றி மழைநீா் குளம்போல தேங்கியது. இப்பகுதியில் நீண்ட நேரம் மின் தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் அவதிப்பட்டனா். திடீா் மழை கோடை உழவுக்கு கைக்கொடுக்கும் என விவசாயிகள் தெரிவித்தனா்.

தொடர்புடையது

நாகா்கோவிலில் பலத்த மழை

கண்ணமங்கலத்தில் சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை: மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு

கோடை மழை: போ்ணாம்பட்டில் 35 மி.மீ. மழை பதிவு

குமரி மாவட்ட அணைப் பகுதிகளில் பலத்த மழை
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

