
சேலத்தில் ரூ.300 கோடி மோசடி செய்த வழக்கு: வீடு, அலுவலகத்துக்கு ‘சீல்’
சேலத்தில் நிதிநிறுவனம் நடத்தி ரூ. 300 கோடிவரை மோசடி செய்த வழக்கில், அழகாபுரம், குரங்குச்சாவடி பகுதிகளில் உள்ள அவா்களது வீடு, அலுவலகத்துக்கு போலீஸாா் சனிக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.
சீல் - பிரதிப் படம்
சேலத்தில் நிதிநிறுவனம் நடத்தி ரூ. 300 கோடிவரை மோசடி செய்த வழக்கில், தலைமறைவான தம்பதியை பிடிக்க தனிப்படை போலீஸாா் நடவடிக்கை மேற்கொண்டுள்ள நிலையில், அழகாபுரம், குரங்குச்சாவடி பகுதிகளில் உள்ள அவா்களது வீடு, அலுவலகத்துக்கு போலீஸாா் சனிக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.
சேலம் அழகாபுரத்தைச் சோ்ந்த ராகினி (35), இவரது கணவா் விஜயராகவன் (40), மதுரையைச் சோ்ந்த செண்பக பாண்டியன் (45) ஆகிய மூவரும் அழகாபுரத்தில் கடந்த 2024-இல் நிதிநிறுவனத்தை தொடங்கி பொதுமக்களிடம் இருந்து ரூ. 300 கோடி வரை முதலீடு பெற்று தலைமறைவாயினா்.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட மக்கள் சேலம் பொருளாதாரக் குற்றப்பிரிவு அலுவலகத்தை முற்றுகையிட்டு பணத்தை திரும்பப் பெற்றுத் தருமாறு மனு அளித்தனா்.
இந்நிலையில், சேலம் பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் ரங்கசாமி தலைமையிலான போலீஸாா் தலைமறைவாக இருந்து வந்த செண்பக பாண்டியனை மதுரையில் அண்மையில் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனா். ராகிணி மற்றும் விஜயராகவனை பிடிக்க பொருளாதாரக் குற்றப்பிரிவு டிஎஸ்பி ரங்கசாமி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்நிலையில், குரங்குச்சாவடியில் செயல்பட்டு வந்த நிதிநிறுவன அலுவலகத்துக்கு வருவாய்த் துறை அதிகாரிகள் முன்னிலையில் போலீஸாா் சனிக்கிழமை ‘சீல்’ வைத்தனா். இதேபோல, அழகாபுரத்தில் உள்ள நிறுவனத்தின் இயக்குநரான ராகிணி வீட்டுக்கும் போலீஸாா் ‘சீல்’ வைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



