பெரியகுளம், நவ. 2: பெரியகுளம் அருகே உள்ள "சின்னக் குற்றாலம்' என அழைக்கப்படும் கும்பக்கரை நீர்வீழ்ச்சியில் அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொடைக்கானல் மலை அடிவாரத்தில் கும்பக்கரை நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. பெரியகுளத்தில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ளது. கொடைக்கானல் மலைப் பகுதியில் பெய்யும் மழை மற்றும் மலைகளின் இயற்கை ஊற்று ஆகியவற்றின் மூலம் கும்பக்கரை நீர்வீழ்ச்சிக்கு நீர்வரத்து ஏற்படுகிறது.
வனத்துறையின் பராமரிப்பில் உள்ள இந்த அருவியில் யானை கெஜம், குதிரை கெஜம், வழுக்குப் பாறை ஆகிய பகுதிகளில் நீர் தேங்கி இருக்கும். இதில் யானை கெஜம் மட்டும் ஆபத்தான பகுதி. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த அருவியில் ஆனந்தமாகக் குளித்து மகிழ்கின்றனர்.
ஆனால் அருவியின் கீழ் உள்ள ஆபத்தான யானை கெஜம் பகுதியில் நீச்சலடித்துக் குளிப்பவர்கள் இதில் உள்ள பாறைகளுக்கு இடையே சிக்கியும், பாறைகளில் மோதியும் உயிரிழந்து வருகின்றனர். எனவே யானை கெஜத்தை தரமான கம்பி வலைகள் அமைத்து அல்லது காங்கிரீட் மூலம் மூட வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்த அருவிப் பகுதியில் அமைந்துள்ள தடுப்புக் கம்பிகள், படிக்கட்டுகள் சேதமடைந்துள்ளன. இதனை சீர் செய்ய வேண்டும். குரங்குகள் தொல்லை அதிகமாக உள்ளதால், இதனைக் கட்டுப்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குளித்த பின்னர் பெண்கள் ஆடைகளை மாற்ற கூடுதலாக தனி அறைகள் கட்ட வேண்டும். சமூக விரோதச் சம்பவங்கள் நடைபெறுவதைத் தடுக்கும் வகையில், அருவிப் பகுதியில் மின் விளக்கு வசதி செய்ய வேண்டும்.
அருவியைப் பற்றி சுற்றுலாப் பயணிகள் அறிந்து கொள்ளும் வகையில் சுற்றுலா கைடுகள் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை அரசு செய்ய வேண்டும் எனப் பல்வேறு சமூக நலச் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.