/

அடிப்படை வசதி இல்லாத திருத்தங்கல் அரசு மேல்நிலைப் பள்ளி

சிவகாசி, ஆக. 3: சிவகாசி வட்டம் திருத்தங்கலில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லாததால் மாணவ, மாணவிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். திருத்தங்கலில், ஆயிரம் மாணவர்கள் படிக்கும் சிவகாசி ஊர

Updated On :20 செப்டம்பர் 2012, 7:59 am

சிவகாசி, ஆக. 3: சிவகாசி வட்டம் திருத்தங்கலில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லாததால் மாணவ, மாணவிகள் மிகவும் அவதிப்படுகின்றனர்.

திருத்தங்கலில், ஆயிரம் மாணவர்கள் படிக்கும் சிவகாசி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, 1500 மாணவர்கள் படிக்கும் அரசு மேல்நிலைப் பள்ளி, 1350 மாணவிகள் படிக்கும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய மூன்று பள்ளிகளும் ஒரே வளாகத்தில் உள்ளன.

துவக்கப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி இல்லை.

திறந்தவெளியையே கழிப்பிடமாகப் பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது.

மூன்று பள்ளிகளுக்கும் சேர்ந்து ஒரு தொட்டியில் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது.

பாத்திரம் கழுவ பயன்படுத்தும் தண்ணீரை வேறு வழியில்லாமல் குடிநீராகப்  பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது.

மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு மட்டும் கழிப்பறை வசதி செய்யப்பட்டுள்ளது. அதுவும் போதுமானதாக இல்லை. மாணவர்களுக்கு என உள்ள கழிப்பறையில்  தண்ணீர் வசதி இல்லை. கதவு இல்லை.

தண்ணீர் வசதி செய்ய மேல்நிலைத் தொட்டி கட்டப்பட்டுள்ளது. அந்தத் தொட்டியில் தண்ணீர் ஏற்ற குழாய் வசதி எதுவும் அமைக்கப்படவில்லை.

அண்மையில் இரு ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டும் தண்ணீர் இல்லாமல் போய்விட்டது.

பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு போதிய கட்டட வசதி இல்லாததால், மாணவிகள் மரத்தடியில் அமர்ந்து படிக்க வேண்டிய நிலை உள்ளது. பள்ளிக்கு கூடுதல் கட்டடம் கட்ட அரசு நிதி ஒதுக்கியும், பள்ளி பகுதியில் பாறை உள்ளதால் கட்டடம் கட்ட ஒப்பந்தக்காரர்கள் எவரும் முன்வரவில்லை.

பல வகுப்பு அறைகளுக்கு கதவு இல்லை. மேற்கூரையாக போடப்பட்டுள்ள சிமென்ட் சீட் பல இடங்களில் உடைந்துள்ளது. பள்ளியின் சுற்றுச்சுவரில் போக வர வசதிக்காக  பெரிய அளவில் துளையை மாணவர்களே அமைத்துள்ளனர்.

இரவு நேரங்களில் பள்ளியில் மின் வசதி இல்லாததால், சமூகவிரோதிகள் அந்தத் தளை வழியாக பள்ளி வளாகத்திற்குள் நுழைந்து சமூகவிரோத செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

இப்பள்ளிக்கு தண்ணீர் வசதி, மின் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட வசதிகளை அரசு உடனடியாக செய்து தரவேண்டும் என்பது திருத்தங்கல் பொதுமக்களின் வேண்டுகோள்.

இது குறித்து அந்தப் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சங்கர் கூறியதாவது:

இந்தப் பள்ளி சுவரில் மாணவர்கள் துளை அமைத்துள்ளதால் பல முறை திருட்டு நடைபெற்றுள்ளது.

ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிக்கு கிழக்குப் பக்கம் வாசல் அமைத்து, அதற்கு தனி வளாகம் அமைக்க வேண்டும். அப்படி அமைக்கப்பட்டால் அரசு பொதுத் தேர்வு நேரங்களில்  அந்தப் பள்ளிக்கு விடுமுறை விடவேண்டிய நிலை வராது.

தமிழ்வழியில் படித்து பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெறும் மாணவர்களுக்கு மடிக் கணினி வழங்கி ஊக்கப்படுத்தும் அரசு, மாணவர்கள் படிக்கும் சூழ்நிலையை நன்றாக பராமரிக்க வேண்டும். பள்ளியில் போதிய அடிப்படை வசதிகளை அரசு உடனடியாக செய்து தர வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.