/

சட்ட விரோதமாக ஆண்டுக்கு |120 கோடி பட்டாசு தயாரிப்பு

சிவகாசி, ஆக 12:    விருதுநகர் மாவட்டம், சிவகாசி பகுதியில் சட்ட விரோதமாக ஆண்டுக்கு |120 கோடி அளவில் பட்டாசு தயாரிக்கப்படுவதாக பட்டாசு தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.   சிவகாசி பகுதியில் மாவட்ட வருவாய் அல

Updated On :20 செப்டம்பர் 2012, 8:19 am

சிவகாசி, ஆக 12:    விருதுநகர் மாவட்டம், சிவகாசி பகுதியில் சட்ட விரோதமாக ஆண்டுக்கு |120 கோடி அளவில் பட்டாசு தயாரிக்கப்படுவதாக பட்டாசு தயாரிப்பாளர்கள்

கூறுகின்றனர்.

  சிவகாசி பகுதியில் மாவட்ட வருவாய் அலுவலர் மூலம் அனுமதி பெற்று சுமார் 150 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்திய அரசின் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் அனுமதி பெற்று சுமார் 450 பட்டாசு ஆலைகள் இயங்கின்றன.

  மாவட்ட வருவாய் அலுவலர் மூலம் அனுமதி பெறப்படும் ஆலைகளில் 18 தொழிலாளர்கள் மட்டுமே பணிபுரிய வேண்டும். ஆனால், உரிமம் பெற்றவர்களில் பலர் ஒவ்வொரு அறையையும் தனித்தனியே ஆண்டு குத்தகைக்கு விட்டு விடுகின்றனர்.

  குத்தகைக்கு எடுத்தவர்கள் விதியை மீறி கூடுதலான தொழிலாளர்களைப் பணிக்கு அமர்த்துகின்றனர். இவர்கள் அனைவரும் பட்டாசு தயாரிக்கப் பயன்படும்

திரிகளை வெளிநபர்களிடமிருந்து வாங்குபவர்கள்.

  வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் அனுமதி பெற்று பட்டாசு ஆலை நடத்துபவர்களில் சுமார் 150 ஆலை நிர்வாகத்தினர், திரியினை வெளி நபர்களிடமிருந்து  வாங்குபவர்கள்.

  இதனால் அருப்புக்கோட்டை, சங்கரலிங்காபுரம், மீனாட்சிபுரம் ஆகிய கிராமங்களில் முழுக்க முழுக்க திரி மட்டுமே சட்ட விரோதமாகத் தயாரிக்கப்படுகிறது.

  பட்டாசு ஆலையில் திரி தயாரிக்க ஓர் அறை ஒதுக்கப்பட்டிருக்கும். ஆனால், ஆலை நிர்வாகத்தினர், அந்த அறையையும் பட்டாசு தயாரித்துப் பயன்படுத்திக் கொண்டு, வெளிநபரிடம் திரியை வாங்குகின்றனர்.

  தற்போது தீப்பெட்டித் தொழிலில் பல இடங்களில் பகுதி இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இதனால் குடிசைத் தொழிலான தீப்பெட்டி ஆலைகள் மூடப்பட்டு விட்டன.

  எனினும், இந்த ஆலை உரிமையாளர்கள் ஆலை நடைபெறுவது போல கணக்குக் காட்டி, மூலப்பொருளான சல்பரை சட்ட விரோதமாகத் தயாரிப்பவர்களுக்கு நல்ல விலைக்கு விற்று விடுகின்றனர்.

  இதனால் சட்ட விரோதமாகப் பட்டாசு தயாரிப்பவர்களுக்கு மூலப் பொருள் தாராளமாகக் கிடைக்கிறது.

  தாயில்பட்டி ஊராட்சியில் கலைஞர் காலனி மற்றும் விஜயகரிசல்குளம், இரவார்பட்டி, கணைஞான்பட்டி, சிவகாசி புதுத் தெரு உள்ளிட்ட பல பகுதிகளில் சட்ட விரோதமாக வீடுகளில் பட்டாசு தயாரிக்கப்படுகிறது.

  இவர்களில் 80 சதம் சர வெடி பட்டாசுகளையே தயாரிக்கின்றனர். சரவெடி  தயாரிக்க பிரதானமாகத் திரி தேவைப்படுகிறது.

  சட்ட விரோதமாக திரி தயாரிக்கும் தொழிலும், பட்டாசு தயாரிக்கும் தொழிலும் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

    ஒவ்வொரு வருடமும் தீபாவளிக்கு 3 அல்லது 4 மாதத்துக்கு முன்னர் வருவாய்த் துறையினர் மற்றும் போலீஸôர் சட்ட விரோதமாகப் பட்டாசு தயாரிக்கப் பயன்படும் பகுதிகளில் சோதனை நடத்துவர்.

  சோதனைக்கு அதிகாரிகள் வருவது தொடர்பாக முன்கூட்டியே தகவல் கிடைத்து, வீட்டில் உள்ள பட்டாசு மற்றும் மூலப் பொருள்களை வேறு இடத்துக்கு மாற்றி விடுவார்கள். சோதனை நடைபெற்றதாக சிலரைக் கைது செய்து, குறைந்த அளவிலான  பட்டாசுகளைப் பறிமுதல் செய்வார்கள்.

  அரசியல் தலையீடு இல்லாமல், போலீஸôர் சரியான முறையில் சோதனை மேற்கொண்டால் சட்ட விரோதமாகப் பட்டாசு தயாரிப்பதை முற்றிலும் நிறுத்த வாய்ப்பு உள்ளது. ஆனால், பெயரளவில் சோதனை நடத்துவது வழக்கமாகி விட்டது.

  அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறியது போல, வெடி விபத்தில்  தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சோதனையின் போது ஏற்பட்ட விபத்தில் வருவாய்த் துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் காயமடைந்துள்ளனர்.

  இனியாவது அரசு கடும் நடவடிக்கை எடுத்து விலை மதிப்பற்ற உயிர்களைக் காக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் வேண்டுதலாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.