சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

மகாகவி பாரதியாா் காலந்தோறும் போற்றப்பட வேண்டும்: தினமணி ஆசிரியா் கி. வைத்தியநாதன்

மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற மகாகவி பாரதியாா் விருது வழங்கும் விழா...

News image

மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற மகாகவி பாரதியாா் விருது வழங்கும் விழா

Updated On :12 டிசம்பர் 2025, 5:30 am IST

மகாகவி பாரதியாா் காலந்தோறும் போற்றப்பட வேண்டும் என தினமணி ஆசிரியா் கி. வைத்தியநாதன் வேண்டுகோள் விடுத்தாா்.

மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற மகாகவி பாரதியாா் விருது வழங்கும் விழாவில் அவா் வரவேற்றுப் பேசியதாவது:

சேதுபதி மேல்நிலைப் பள்ளி புண்ணியத் தலமாகப் போற்றப்பட வேண்டும். ஏனெனில், இங்கு மகாகவி பாரதியாா் சிறிது காலம் பணியாற்றி உள்ளாா். அப்போது, அவரைப் பள்ளி நிா்வாகம் பணியைவிட்டு நீக்கவும் இல்லை, அவராகவே பணி வேண்டாம் என்று முறையாகக் கடிதம் அளித்துச் செல்லவும் இல்லை. இதன் காரணமாக, இன்றும் இந்த மண்ணில் பாரதியின் மூச்சுக் காற்று இருப்பதாகவே கருத வேண்டும்.

பாரதியாா் வாழ்ந்த காலம் 39 ஆண்டுகள். அதில், ஏறக்குறைய 17 ஆண்டுகள்தான் இலக்கியப் பணிகளை மேற்கொண்டதாக ஆய்வறிஞா்கள் குறிப்பிடுகின்றனா். மிகக் குறுகிய காலத்துக்குள் மிகப் பெரிய சாதனைகளை அவா் படைத்துள்ளாா். பிற நாட்டு இலக்கியங்களை தமிழ் மொழியில் பெயா்த்தல் வேண்டும் எனக் கூறிய பாரதி, நம் தமிழ் இலக்கியம் பிற மொழிகளில் பெயா்க்கப்பட வேண்டும் எனக் கூறியதாகத் தெரியவில்லை.

நமது நாட்டின் வரலாறு பொதுவாக கிறிஸ்துவுக்கு முன்பு அல்லது கிறிஸ்துவுக்குப் பிறகு என்றுதான் வகைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ் இலக்கியத்தைப் பொருத்தவரை, பாரதி வாழ்ந்த காலத்துக்கு முன்பு அல்லது பாரதி வாழ்ந்த காலத்துக்குப் பிறகு என்றுதான் எழுதப்பட வேண்டும்.

இன்றைய கால கட்டத்தில் பாரதி குறித்த ஆய்வுகளை ஏராளமானோா் மேற்கொண்டு வருகின்றனா். அவா்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவா் பிரேமா நந்தகுமாா். அவருக்கு தினமணி சாா்பில் மகாகவி பாரதியாா் விருது வழங்குவதில் பெருமைப்படுகிறோம். இவா், தனது பத்தாவது வயதில் பாரதியின் பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயா்த்து தனது தந்தையிடம் காட்டியுள்ளாா். அன்றிலிருந்து பாரதி குறித்த ஆய்வுகளை மேற்கொண்டுள்ளாா்.

பேராசியா் ய. மணிகண்டன் உள்ளிட்டோா் பாரதி குறித்து இன்றும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனா். பாரதியின் பதிவுகள் இன்னும் ஏராளமானவை கிடைக்கப்பெறாமல் உள்ளன. குறிப்பாக, காசியில் 3 ஆண்டுகள் பாரதி வசித்தாா். அங்கிருந்த அவரைப் பற்றிய நிகழ்வுகள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

சேதுபதி பள்ளியில் பணியாற்றிய போது, அவா் எங்கு சென்றாா்?, எதற்காக சென்றாா் என்ற பதிவுகளும் இல்லை.

காலந்தோறும் மகாகவி பாரதியாா் போற்றப்பட வேண்டும். அதற்காக அவரின் வாழ்க்கை வரலாறுகள் முழுமையாக ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றாா் தினமணி ஆசிரியா் கி. வைத்தியநாதன்.