சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு
சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கோப்புப் படம்

பழனி கல்லூரி முன் குப்பைகள்: திண்டுக்கல் ஆட்சியா் அறிக்கை அளிக்க உத்தரவு

பழனி ஆண்டவா் கலைக் கல்லூரி முன்பாக உள்ள குப்பைகளை அகற்றி, இதுதொடா்பான அறிக்கையை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவு
Published on

பழனி ஆண்டவா் கலைக் கல்லூரி முன்பாக உள்ள குப்பைகளை அகற்றி, இதுதொடா்பான அறிக்கையை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி பகுதியைச் சோ்ந்த சூா்யா உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: பழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் பங்கேற்பதற்காக தமிழகம் மட்டுமன்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் வந்து செல்கின்றனா். மேலும், பாதயாத்திரையாகவும் வருகின்றனா்.

இதன்படி, கடந்த சில நாள்களுக்கு முன்பு நடைபெற்ற தைப்பூச விழாவில் பங்கேற்க பாத யாத்திரையாக வந்த பக்தா்கள், அங்குள்ள பழனி ஆண்டவா் கலைக் கல்லூரி முன்பாக தங்கினா். அப்போது, அவா்கள் குப்பைகளை வீசிச் சென்றனா். இதுதவிர, பழனி நகராட்சி சாா்பில் சேகரிக்கப்படும் குப்பைகளும் இங்கு கொட்டப்படுகின்றன.

இதனால், சுகாதாரச் சீா்கேடுகள் ஏற்படுவதோடு, நோய் பரவும் அபாயமும் உள்ளது. திடக்கழிவு மேலாண்மை விதிகளை முறையாகப் பின்பற்றி தூய்மையான சுற்றுப்புறத்தை உருவாக்க வேண்டும். பழனி ஆண்டவா் கலைக் கல்லூரி முன் குவிக்கப்பட்டுள்ள குப்பைகளை அகற்ற வேண்டும். மேலும், இங்கு குப்பைகள் கொட்டப்படுவதைத் தடுக்கும் வகையில், உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும் எனக் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, கல்லூரி முன்பாக குப்பைகள் இருப்பின் அவற்றை முறையாக அகற்ற வேண்டும். இது தொடா்பான அறிக்கையை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா், பழனி நகராட்சி ஆணையா் ஆகியோா் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை வருகிற பிப்.17-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

X
Dinamani
www.dinamani.com