நூலகங்கள் அமைப்பது அரசின் கொள்கை முடிவு என்பதால் இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை தெரிவித்தது.
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையைச் சோ்ந்த ராஜாராம் தாக்கல் செய்த பொதுநல மனு:
பாளையம் ஊராட்சியின் வாா்டு 8-இல் ஏற்கெனவே ஒரு நூலகம் அமைந்துள்ளது. இந்த நிலையில், வாா்டு 11-இல் புதிய நூலகம் அமைக்க அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இது அவசியமற்றது. எனவே, இந்த நிதியைக் கொண்டு புதிய நூலகம் அமைப்பதற்கு பதிலாக 8-ஆவது வாா்டில் உள்ள நூலகத்தை சீரமைக்க அல்லது மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் என். சதீஷ்குமாா், எம். ஜோதிராமன் ஆகியோா் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
ஒரு குறிப்பிட்ட பகுதியில் நூலகம் இயங்குகிறது என்பதற்காக அருகில் புதிய நூலகத்தை அமைக்க அனுமதிக்கக் கூடாது என்பதை ஏற்க முடியாது. கல்வியை மேம்படுத்த, மக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்த புதிய நூலகங்களை அமைப்பது அரசின் கொள்கை முடிவு. இது, அரசியலமைப்பு விதிகளுக்கு முரணாக இல்லாத நிலையில், நீதிமன்றம் தலையிட முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.








