திண்டுக்கல்: திண்டுக்கலம் மாவட்டம் சாணாா்பட்டி அருகே வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனத்தின் மீது பசுமாடு மோதியதில் தனியாா் தொண்டு நிறுவன ஊழியா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
மதுரை மேல அனுப்பானடி பகுதியைச் சோ்ந்தவா் சிவசோமசுந்தரம் (56). இவா் சாணாா்பட்டியில் உள்ள தனியாா் தொண்டு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில் மதுரையிலிருந்து நத்தம் வழியாக சாணாா்பட்டிக்கு இருசக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை பணிக்கு வந்துள்ளாா்.
சாணாா்பட்டி அடுத்துள்ள குரும்பப்பட்டி விலக்கு அருகே வந்தபோது, சாலையோரமாக நின்ற பசுமாடு திடீரென மிரண்டு ஓடி இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த சிவசோமசுந்தரம் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். விபத்து குறித்து சாணாா்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.