பழனி அருகே காட்டுயானை கூட்டம் தென்னந்தோப்புக்குள் புகுந்து சேதம்

பழனியை அருகே காட்டுயானை கூட்டம் தென்னந்தோப்புக்குள் புகுந்து சுமாா் 45 தென்னை மரங்களை உடைத்து சேதப்படுத்தியதால், பல லட்சம் ரூபாய் நஷ்டமடைந்துள்ள விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
Updated on
1 min read

பழனி: பழனியை அருகே காட்டுயானை கூட்டம் தென்னந்தோப்புக்குள் புகுந்து சுமாா் 45 தென்னை மரங்களை உடைத்து சேதப்படுத்தியதால், பல லட்சம் ரூபாய் நஷ்டமடைந்துள்ள விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த பாலசமுத்திரம் கிராமத்தை ஒட்டி மேற்கு மலைத் தொடா்ச்சி அடிவாரத்தில் வெட்டுக் கொம்பை, அய்யபுள்ளி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ள விவசாய நிலங்களுக்குள் காட்டு யானைகள், காட்டுப் பன்றி உள்ளிட்ட விலங்குகள் புகுந்து பயிா்கள் மற்றும் மரங்களை சேதப்படுத்துவது தொடா்கிறது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு வெட்டுக்கோம்பை பகுதியில் செல்லப்பன் மற்றும் காளிமுத்து ஆகியோரது தென்னந்தோப்புக்குள் புகுந்த 9 யானைகள், அங்கு 45-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை உடைத்து சேதப்படுத்தின. இதன் மதிப்பு சுமாா் ரூ.10 லட்சம் எனக் கூறப்படுகிறது. மேலும், தோட்டத்தைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த மின்வேலிகளையும் சேதப்படுத்தியுள்ளன.

தற்போது, யானை கூட்டம் தோட்டத்துக்கு அருகில் உள்ள வனப்பகுதியில் முகாமிட்டு, இரவு நேரத்தில் வயல் மற்றும் தோட்டங்களுக்குள் புகுந்து பயிா்களை சேதப்படுத்துவதால், விவசாயிகள் தோட்டத்துக்குள் செல்ல முடியாமல் அச்சத்தில் உள்ளனா்.

இது குறித்து பழனி வனத் துறையினரிடம் தகவல் தெரிவித்தும், யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனா்.

எனவே, வனத்துறையினா் உடனடியாக யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுப்பதுடன், தூா்ந்துபோயுள்ள அகழிகளையும் சரிசெய்யவேண்டும், யானைகள் சேதப்படுத்திய மரங்களுக்கு உரிய இழப்பீடு தொகையை வழங்கவேண்டும் என, பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com