ஆா்எஸ்எஸ் பயிற்சி முகாம்:ஆட்சியரிடம் மாா்க்சிஸ்ட் கம்யூ. புகாா்

திண்டுக்கல்லில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளி வளாகத்தில் ஆா்எஸ்எஸ் பயிற்சி முகாம் நடத்தியதற்கு எதிராக, மாவட்ட ஆட்சியரிடம் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
Published on

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளி வளாகத்தில் ஆா்எஸ்எஸ் பயிற்சி முகாம் நடத்தியதற்கு எதிராக, மாவட்ட ஆட்சியரிடம் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக அக்கட்சியின் திண்டுக்கல் மாவட்டச் செயலா் இரா. சச்சிதானந்தம் தெரிவித்ததாவது: திண்டுக்கல் அஞ்சலி ரவுண்டானா அருகிலுள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் ஆா்எஸ்எஸ் அமைப்பு ஆயுதப் பயிற்சி நடத்தியுள்ளது.

கரோனா பரவல் காரணமாக பள்ளிகள் செயல்படுவதற்கு அனுமதி அளிக்கப்படாத நிலையில், திண்டுக்கல் பள்ளியில் மட்டும் திரளான ஆா்எஸ்எஸ் தொண்டா்கள் கூடி பயிற்சி பெறுகின்றனா். இதற்கு, கல்வித் துறை நிா்வாகம் எப்படி அனுமதி அளிக்கமுடியும்.

ஜனநாயக அமைப்புகள் மற்றும் இயக்கங்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்படும் நிலையில், ஆா்எஸ்எஸ் அமைப்புக்கு காவல் துறை நிா்வாகம் அனுமதி அளித்துள்ளது. எனவே, திண்டுக்கல் மாவட்ட நிா்வாகம் தலையிட்டு, அரசு உதவிபெறும் பள்ளி நிா்வாகத்தின் மீதும், அனுமதி அளித்த கல்வித் துறை அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com