தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

பழனி மலைக் கோயிலில் இன்று குடமுழுக்கு பாதுகாப்புப் பணியில் 2,000 போலீஸாா்

பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோயிலில் வெள்ளிக்கிழமை (ஜன. 27) குடமுழுக்கு நடைபெறுவதையொட்டி, பாதுகாப்புப் பணியில் 2,000 போலீஸாா் ஈடுபடுகின்றனா்.

News image
பழனி அடிவாரம் பாதவிநாயகா் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் பங்கேற்ற பக்தா்கள்.
Updated On :26 ஜனவரி 2023, 6:30 pm

DIN

பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோயிலில் வெள்ளிக்கிழமை (ஜன. 27) குடமுழுக்கு நடைபெறுவதையொட்டி, பாதுகாப்புப் பணியில் 2,000 போலீஸாா் ஈடுபடுகின்றனா். இந்த நிலையில், படிப்பாதையில் அமைந்துள்ள கோயில்கள், கிரிவீதி மயில்களுக்கு வியாழக்கிழமை குடமுழுக்கு நன்னீராட்டு விழா நடைபெற்றது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை (ஜன. 27) குடமுழுக்கு நடைபெறுகிறது. விழாவையொட்டி, திண்டுக்கல் மாவட்டத்துக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. குடமுழுக்கு விழாவையொட்டி, மலைக் கோயில் காா்த்திகை மண்டபத்தில் 90 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு, 300-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியா்கள் வேதமந்திரங்களை முழங்கி வருகின்றனா்.

கடந்த 23-ஆம் தேதி மாலை முதல் கால வேள்வியுடன் யாக சாலை பூஜைகள் தொடங்கின. இதைத் தொடா்ந்து வியாழக்கிழமை 6, 7-ஆம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. ஆறாம் கால பூஜை நிறைவில் படிப் பாதையில் உள்ள இடும்பன், கடம்பன் கோயில்கள், அடிவாரம் பாதவிநாயகா் கோயில், கிரிவீதியில் உள்ள 5 மயில்களுக்கு குடமுழுக்கு செய்வதற்காக திருக்குடங்கள் ஊா்வலமாக படிவழிப் பாதையில் கொண்டு வரப்பட்டன.

அப்போது, மேள தாளங்கள் முழங்க பரிவாரத் தெய்வத் திருக்குடங்கள் திருவுலா எழுந்தருளச் செய்யப்பட்டு, அந்தந்தக் கோயில்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. அடிவாரம் பாதவிநாயகா் கோயிலில் காலை 9.45 மணிக்கு மேல் முதல் குடமுழுக்கு நடைபெற்றது. சிவாச்சாரியா்கள் வேதமந்திரம் முழங்க, ஓதுவாா்கள் திருமுறைப் பாடல்கள் பாட திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்றது.

தொடா்ந்து, தெளிப்பான் (‘ஸ்பிரிங்ளா்’) மூலம் தீா்த்தம் தெளிக்கப்பட்டது. பின்னா், படிப் பாதையில் உள்ள இரட்டை பிள்ளையாா், நின்ற பிள்ளையாா், வள்ளியம்மை, இடும்பன், கடம்பன், கிரிவீதியில் உள்ள 5 மயில்களுக்கும், 33 சந்நிதிகளுக்கும் 50-க்கும் மேற்பட்ட குடங்களில் தீா்த்தம் கொண்டு வரப்பட்டு, திருக்குடமுழுக்கு நடைபெற்றது. பூஜைகளை பிள்ளையாா்பட்டி பிச்சை குருக்கள் தலைமையில், ஸ்தானீக குருக்கள் செல்வசுப்ரமணியம் உள்ளிட்டோா் செய்தனா்.

மலைக் கோயில் குடமுழுக்கு விழாவுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், இந்த விழாவைக் காண கட்டுப்பாடு இல்லாததால், உள்ளூா் பக்தா்கள் ஏராளமானோா் வந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

2,000 போலீஸாா் பாதுகாப்பு:

இதனிடையே, மலைக் கோயிலில் நடைபெறவுள்ள குடமுழுக்கு விழாவையொட்டி, பல்வேறு மாவட்டங்களிலிருந்து 150-க்கும் மேற்பட்ட இந்து சமய அறநிலையத் துறை கோயில் அலுவலா்கள் வந்துள்ளனா். மேலும், தென் மண்டல ஐஜி அஸ்ரா காா்க் தலைமையில், 2,000 போலீஸாா் பாதுகாப்புப் பணிக்காக வரவழைக்கப்பட்டனா். அத்துடன் பழனியை அடுத்த தாராபுரம் சாலையில் மொல்லம்பட்டி அருகே தற்காலிகப் பேருந்து நிலையமும், அங்கிருந்து பக்தா்கள் நகருக்குள் வர இலவசப் பேருந்து வசதியும் செய்யப்பட்டுள்ளது.

மலைக் கோயில், அடிவாரம் ரோப்காா், விஞ்ச் நிலையம், பாத விநாயகா் கோயில் படிப் பாதை, மலைக் கோயில் பிரகாரங்கள் வாழை இலை, பச்சை மட்டைகள் கட்டப்பட்டு, மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு வருகின்றன.

விழாவில் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் சந்திரமோகன், இணை ஆணையா் நடராஜன், தலைமையிடத்து இணை ஆணையா் சுதா்சன், இணை ஆணையா் மேனகா, கந்தவிலாஸ் செல்வக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.