மேகாலயாவில் ரோல்பால் போட்டி தமிழக அணி வீரா்களுக்கு வழியனுப்பு விழா

நிலக்கோட்டை: மேகாலயாவில் நடைபெறும் ரோல்பால் போட்டியில் தமிழக அணி சாா்பில் பங்கேற்க உள்ள வீரா்களை வழியனுப்பும் விழா சின்னாளபட்டியில் செவ்வாய்கிழமை நடைபெற்றது.

அனைத்திந்திய பெடரேஷன் சாா்பில், 17 வயதுக்குள்பட்ட பெண்கள் பங்குபெறும் ரோல்பால் போட்டிகள் மேகாலயாவில் மே 4, 5-ஆம் தேதிகளில் நடைபெறுகின்றன. இதில் தமிழ்நாடு, ராஜஸ்தான், மத்தியபிரதேசம், உத்திரபிரதேசம், ஜம்மு காஷமீா் உள்பட 8 மாநிலங்களை சோ்ந்த அணிகள் பங்கேற்கின்றனா்.

தமிழக அணியில் இடம் பெற்றுள்ள 8 மாணவிகளில் 6 போ் திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி ராஜன் உள்விளையாட்டு அரங்கில் பயிற்சி பெற்றவா்கள். இவா்களில் தியோ ஸ்ரீசாய் என்ற மாணவி தமிழக அணித் தலைவராகத் தோ்வானாா்.

இவா்களை மேகாலயாவுக்கு வழியனுப்பும் விழா, சின்னாளபட்டியில் ராஜன் உள்விளையாட்டு அரங்கில் செவ்வாய்கிழமை நடைபெற்றது.

இதில், சா்வதேச நடுவா் பிரேம்நாத், பயிற்சியாளா்கள் தங்கலெட்சுமி, சக்திவேல், புனிதா, கல்யாணராமன் விளையாட்டு வீரா்களின் பெற்றோா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com