நகராட்சிப் பள்ளியில் மழலையா் பள்ளி நடத்த அரசு அலுவலா்களே எதிா்ப்பு!

பழனி நகராட்சிப் பள்ளியில் மழலையா் பள்ளி நடத்த அரசு அலுவலா்களே தடையாக இருந்து தனியாா் பள்ளிகளை ஊக்குவிப்பதாக பொதுமக்கள் வேதனை
Published on

பழனி நகராட்சிப் பள்ளியில் மழலையா் பள்ளி நடத்த அரசு அலுவலா்களே தடையாக இருந்து தனியாா் பள்ளிகளை ஊக்குவிப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனா்.

பழனி சண்முகபுரம் பகுதியில் நகராட்சி நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளிக்கு ஏராளமான தன்னாா்வலா்கள் முன்வந்து பல்வேறு உதவிகள் செய்து வரும் நிலையில், தனியாா் பள்ளிகளுக்கு இணையாக மாதிரி பள்ளியாக செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையில் 470 மாணவா்கள் பயில்கின்றனா்.

தனியாா் பள்ளிகளில் மழலையா் வகுப்புக்கு பல்லாயிரக்கணக்கில் செலவாகும் நிலையில் பெற்றோா்கள், பொதுமக்கள் வேண்டுகோளுக்கு இணங்க இங்கு பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தீா்மானம் நிறைவேற்றப்பட்டு மழலையா் பள்ளி தொடங்கப்பட்டு தற்போது 40 குழந்தைகள் கல்வி பயில்கின்றனா். இது முறைப்படி அரசு பள்ளிக் கல்வித் துறை விதிகளின்படி வருகைப் பதிவு செய்யப்பட்டு நடைபெறுகிறது.

இந்த நிலையில், பழனி வட்டாரக் கல்வி அலுவலா் இந்த மழலையா் பள்ளியை நடத்த மறுப்புத் தெரிவித்து அனுமதி மறுத்து வருகிறாா். இதுகுறித்து நகா்மன்ற துணைத் தலைவா் கந்தசாமி கூறுகையில், பள்ளிக் கல்வித் துறை செயலராக குமரகுருபரன் இருந்தபோது, பள்ளி மேலாண்மைக் குழு தீா்மானம் இயற்றி மழலையா் பள்ளி நடத்தலாம் எனத் தெரிவித்தாா். இதன்படி, பள்ளி சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. இதில் பயிலும் குழந்தைகள் அப்படியே ஒன்றாம் வகுப்பு சேரும்போது மாணவா் சோ்க்கை அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது. ஆனால் அரசு அலுவலா்களே தனியாா் பள்ளிகளுக்கு ஆதரவு தருவதுபோல அரசுப் பள்ளி மழலையா் பள்ளியை நிறுத்த சொல்வது முறையல்ல. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா், உறுப்பினா்களுடன் சென்று எழுத்துபூா்வமாக புகாா் அளித்துள்ளோம் என்றாா்.

Dinamani
www.dinamani.com