நிலக்கோட்டை மலா்ச் சந்தையில் மல்லிகைப்பூ விலை கடும் உயா்வு! கிலோ ரூ. 2700-க்கு விற்பனை!
நிலக்கோட்டை மலா்ச் சந்தையில் வெள்ளிக்கிழமை மல்லிகைப்பூ விலை ஒரு கிலோ ரூ. 2700-க்கு விற்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மல்லிகை, முல்லைப் பூக்கள் சாகுபடி அதிகளவில் நடைபெறுகிறது. மேலும் இந்தப் பகுதிகளில் விளையும் பூக்களுக்கு தனிச் சிறப்பு உண்டு. நிலக்கோட்டை மலா்ச் சந்தைக்கு கொண்டுவரப்படும் இந்த பூக்களை வாங்க பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்களைச் சோ்ந்த வியாபாரிகள் அதிக அளவில் வருவா்.
இந்த நிலையில், கடந்த சில நாள்களாக தொடா் மழை, பனிப் பொழிவு காரணமாக பூக்களின் உற்பத்தியும், அதன் வரத்தும் குறைந்தது. இதனால், நிலக்கோட்டை மலா்ச் சந்தையில் கடந்த மாதம் ஒரு கிலோ ரூ. 200 முதல் ரூ. 300 வரை விற்கப்பட்ட மல்லிகைப்பூ வெள்ளிக்கிழமை ரூ. 2700-க்கு விற்பனையானது.
மற்ற பூக்களின் விலை நிலவரம் (கிலோ): முல்லைப்பூ- ரூ. 1,100, செவ்வந்திப் பூ- ரூ. 100, பிச்சிப்பூ- ரூ. 600, துளசி- ரூ. 50, ரோஜா- ரூ. 200, பட்டா் ரோஸ்- ரூ. 250, சம்பங்கி- ரூ. 70, செண்டுப் பூ- ரூ. 50, அரளி- ரூ. 300 என விற்கப்பட்டன.
இதனிடையே பூக்களின் விலை மேலும் உயரும் எனக் கூறப்படுவதால் இந்தப் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
