பழனி மலைக் கோயிலில் இன்று கந்த சஷ்டி விழா தொடக்கம்
பழனி: திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா காப்புக் கட்டுதலுடன் புதன்கிழமை (அக்.22) தொடங்குகிறது.
7 நாள்கள் நடைபெறும் இந்த விழாவை முன்னிட்டு, தமிழகம் மட்டுமன்றி, பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் காப்புக் கட்டி விரதத்தை தொடங்கவுள்ளனா்.
விழாவின் போது, மலைக் கோயிலில் தினந்தோறும் தங்கச் சப்பரத்தில் சின்னக்குமாரசுவாமி புறப்பாடு, சண்முகா் தீபாராதனை ஆகியவை நடைபெறும்.
விழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 27-ஆம் தேதி சூரசம்ஹாரமும், 28-ஆம் தேதி காலையில் வள்ளி, தெய்வானை சமேதா் சண்முகருக்கும், மாலையில் பெரியநாயகியம்மன் கோயிலில் முத்துக்குமாரசுவாமிக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெறும்.
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, துணை ஆணையா் வெங்கடேஷ், உதவி ஆணையா் லட்சுமி, அதிகாரிகள், அலுவலா்கள் செய்து வருகின்றனா்.
