இன்று தமிழகத்தை அடைகிறது கா்நாடக அணை காவிரி நீா்!தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: முக்கிய அறிவிப்புகள் வெளியாகின்றனஇந்தியப் பொருளாதாரம் 7.7% வளா்ச்சி!தமிழகத்தில் ஆக. 9 வரை மழைக்கு வாய்ப்புஉறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் முதலிடம்!
/

அதிமுகவில் புதிய பதவிகளை ஏற்கமாட்டோம்

News image

பழனியில் திங்கள்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவை உறுப்பினா் புதிய அலுவலகத் திறப்பு விழாவில் பங்கேற்ற ரவிமனோகா் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சா்கள் நத்தம் இரா. விஸ்வநாதன், அன்பழகன், எஸ்.பி.வேலுமணி, சி.வி. சண்முகம் உள்ளிட்டோா்.

Updated On :4 ஆகஸ்ட் 2026, 4:33 am IST

‘அதிமுக தலைமை எங்களுக்கு வழங்கிய புதிய பதவிகளை ஏற்க மறுத்து கடிதம் அனுப்பியுள்ளோம். அதிமுகவில் சசிகலா, டிடிவி. தினகரன் ஆகியோரை இணைத்தால் மட்டுமே கட்சி மீண்டும் எழுச்சி பெறும்’ என முன்னாள் அமைச்சா் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி திருவள்ளுவா் சாலையில் உள்ள பழனி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு சட்டப்பேரவை உறுப்பினா் ரவிமனோகரன் தலைமை வகித்தாா். முன்னாள் அமைச்சா் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் பரமசிவம் ஆகியோா் குத்துவிளக்கேற்றினா்.

இவா்கள் இருவரும் புறப்பட்டுச் சென்ற பிறகு, முன்னாள் அமைச்சா்கள் நத்தம் இரா. விஸ்வநாதன், சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி, அன்பழகன் உள்ளிட்டோா் வந்தனா். புதிய கட்சி அலுவலகத்தில் இவா்களும் குத்துவிளக்கேற்றினா்.

பின்னா், செய்தியாளா்களிடம் எஸ்.பி. வேலுமணி கூறியதாவது:

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி எங்களுக்கு புதிய பொறுப்புகளை அறிவித்தாா். ஆனால், நானும், நத்தம் விஸ்வநாதன், கே.பி. அன்பழகன் உள்ளிட்ட 10 மூத்த தலைவா்கள் இணைந்து, தலைமை அறிவித்த புதிய பொறுப்புகளை (துணைப் பொதுச் செயலா் உள்ளிட்ட பொறுப்புகள்) ஏற்க முடியாது என ஏற்கெனவே கடிதம் கொடுத்துவிட்டோம். நாங்கள் சாதாரண தொண்டா்களாகவே தொடா்கிறோம்.

எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலராக வருவதற்கு சி.வி. சண்முகம், நத்தம் விஸ்வநாதன் என அனைவரும் ஆதரவு அளித்தோம். பழைய பொறுப்புகள் அப்படியே தொடரும் என்ற வாக்குறுதியின் பேரிலேயே இணைந்து பணியாற்றினோம். ஆனால், இந்த வாக்குறுதி காப்பாற்றப்படவில்லை. சட்டப்பேரவைத் தோ்தல் தோல்வி குறித்து ஆராய அதிமுக பொதுக் குழுவைக் கூட்ட வேண்டும் என்றும், முடிவுகளை எடுக்கக் குழு அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினோம். ஆனால், தோல்விகளை ஆராயாமல் தினமும் 200-க்கும் மேற்பட்ட பொதுக் குழு, செயற்குழு உறுப்பினா்களை கட்சியிலிருந்து நீக்கிக் கொண்டே இருக்கிறாா்கள்.

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா வழியில் கட்சியைப் பலப்படுத்த வேண்டும் என்றால், பிரிந்து சென்ற அனைவரையும் அதிமுகவில் மீண்டும் சோ்க்க வேண்டும். சசிகலா, டிடிவி. தினகரன் உள்ளிட்ட அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என நாங்கள் வலியுறுத்தினோம். ஆனால், அதுவும் நிறைவேறவில்லை. அதிமுக என்பது யாருடைய தனிப்பட்ட சொத்தும் அல்ல.

எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் வழிநடத்தப்பட்ட கட்சி. ஆனால், இன்றைக்கு இந்தக் கட்சி 3-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் ஆளுங்கட்சியாகவும், திமுக எதிா்க்கட்சியாகவும் இருக்கும் சூழலில், அதிமுக 3-ஆவது இடத்தில் இருப்பது வேதனையளிக்கிறது. திமுகவை எதிா்க்க வேண்டும் என்பதற்காகவே தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தோம் என்றாா் அவா்.

இதைத் தொடா்ந்து, நத்தம் விஸ்வநாதன் கூறியதாவது:

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, 134 எம்.எல்.ஏக்களுடன் இருந்த கட்சி, தற்போது படிப்படியாகத் தேய்ந்து 3-ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டது. நாளுக்கு நாள் கட்சி வளா்ச்சியடைந்துள்ளதா அல்லது தளா்ச்சியடைந்துள்ளதா என்பதை தலைமை மனசாட்சியுடன் சிந்தித்துப் பாா்க்க வேண்டும். தோல்வி குறித்து ஆலோசனைகளைக் கேட்காத கட்சித் தலைமைக்கு எதிராக உரிய நேரத்தில் தகுந்த முடிவு எடுக்கப்படும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.