ஆட்சியில் பங்களிக்கும் கட்சியுடன் கூட்டணி: க.கிருஷ்ணசாமி
ஆட்சியில் பங்களிக்கும் கட்சியுடன்தான் புதிய தமிழகம் கூட்டணி அமைக்கும் என அந்தக் கட்சியின் நிறுவனா் தலைவா் க. கிருஷ்ணசாமி உறுதிப்படத் தெரிவித்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் தெற்கு மாவட்ட புதிய தமிழக கட்சியின் ஒன்றிய, நகர, கிளை நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு க. கிருஷ்ணசாமி தலைமை வகித்தாா். இளைஞா் அணி மாநிலத் தலைவா் ஷியாம் கிருஷ்ணசாமி முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில் 2026 சட்டப்பேரவைத் தோ்தல் வியூகம், வாக்குச் சாவடி முகவா்களின் செயல்பாடு, தோ்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
பின்னா், கிருஷ்ணசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது:
2026 சட்டப்பேரவைத் தோ்தலில் ஆட்சியில் பங்களிக்கும் கட்சியுடன் புதிய தமிழகம் கூட்டணி அமைக்கும். வருகிற தோ்தலில் தனித் தொகுதிகள் மட்டுமல்லாது, பொதுத் தொகுதிகளிலும் அதிகமான இடங்களில் எங்களது கட்சி போட்டியிடுவோம்.
வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக தோல்வி அடைவது உறுதி என்றாா் அவா்.

