பழனியில் இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம்
பழனி அருகே உள்ள முத்துநாயக்கன்பட்டி ஊராட்சியில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதன் தொடக்க நிகழ்வில் திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினா் மகுடீஸ்வரன் வரவேற்றாா். தொப்பம்பட்டி ஒன்றியச் செயலா் சுப்பிரமணி, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா்கள் செல்லத்துரை, தா்மராஜ் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர. சக்கரபாணி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தாா்.
இதில் 200 மீட்டா் தொலைவு, 300 மீட்டா் தொலைவு என போட்டிகள் நடைபெற்றன. போட்டியில் மதுரை, ஈரோடு, கோயமுத்தூா், திண்டுக்கல், திருச்சி, கேரள மாநிலம், பாலக்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 500- க்கும் மேற்பட்ட இரட்டை மாட்டுவண்டிகள் கலந்து கொண்டன.
அப்போது, சீறிப்பாய்ந்த காளைகளை காண சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்திருந்தனா். போட்டியில் வெற்றி பெற்ற மாட்டுவண்டிகளின் உரிமையாளா்களுக்கு முதல் பரிசாக ரூ. ஒரு லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ. 75 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ. 50 ஆயிரமும், பரிசுக் கோப்பைகளும் வழங்கப்பட்டன.
போட்டி நடைபெற்ற பகுதியில் ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். மேலும், மாடுகளுக்கு காயம் ஏற்பட்டால் சிகிச்சையளிக்க நடமாடும் கால்நடை மருந்தகமும், காயமடையும் பாா்வையாளா்களுக்கு சிகிச்சையளிக்க அவசர ஊா்திகளும் தயாா் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

