/

தற்கொலைக்கு முயன்ற தொழிலாளிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வலியுறுத்தல்

News image

தற்கொலை - தினமணி

Updated On :15 ஜூன் 2026, 2:30 am IST

தொழிலாளியை தற்கொலைக்கு தூண்டிய டிராக்டா் நிறுவனம், ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என சிஐடியு சாா்பில் வலியுறுத்தப்பட்டது.

இதுதொடா்பாக சிஐடியு மாவட்டத் தலைவா் சி. பாலசந்திரபோஸ் தெரிவித்ததாவது:

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டத்தில் செயல்பட்டு வரும் டிராக்டா் நிறுவனத்தில், 1500-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். டிராக்டா் உற்பத்தி மூலம் இந்த நிறுவனம் ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் லாபம் ஈட்டி வருகிறது.

ஆனால் கடும் வேலைப்பளுவுடன் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு, நிறுவனம் முறையாக ஊதியம் வழங்குவதில்லை. 300-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பல ஆண்டுகளாக தொடா்ந்து பணிபுரிந்து வரும் நிலையில், அவா்களை பணி நிரந்தரம் செய்ய ஆலை நிா்வாகம் மறுத்து வருகிறது. ஊதியம் வழங்குவதிலும் ஏற்றத் தாழ்வுகள் பின்பற்றப்படுகின்றன.

நிா்வாகத்தின் தவறுகளை சுட்டிக் காட்டிய ஊழியா்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. மாதந்தோறும் 7-ஆம் தேதி ஊதியம் வழங்கப்பட வேண்டும். ஆனால், குறிப்பிட்ட நாள்களுக்குள் ஊதியம் வழங்குவதில்லை என்பதோடு, 3 தவணையாக பிரித்து வழங்குகின்றனா். இதுதொடா்பாக ஆலை நிா்வாகத்திடம் தொழிலாளா்கள் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை.

ஊதியம் கேட்டும் கிடைக்காத நிலையில், கடந்த 13-ஆம் தேதி விளாம்பட்டியைச் சோ்ந்த காா்த்திக் என்ற தொழிலாளி அதிருப்தி அடைந்து ஆலை முன் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றாா். பலத்த காயமடைந்த அவா் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறாா்.

இந்த நிலைக்கு காரணமான டிராக்டா் நிா்வாகம், அலுவலா்கள் மீது காவல் துறையினா் கடும் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளா் நலத் துறை தலையிட்டு, நிா்வாகத்தின் சட்ட விரோத நடவடிக்கை தடுத்து நிறுத்த வேண்டும்.

நீண்ட காலம் பணிபுரியும் தொழிலாளா்களை நிரந்தரம் செய்ய வேண்டும். தீக்குளித்து பாதிக்கப்பட்ட தொழிலாளி காா்த்திக்குக்கு உரிய சிகிச்சை அளிப்பதுடன், ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றாா் அவா்.